காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டி அவர்களின் உறவினர்களின் அறவழிப் போராட்டங்கள் தமிழர் தாயகத்தில் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன. கிளிநொச்சி மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நடத்திவரும் தொடர் போராட்டம் 47 நாட்களை எட்டியுள்ள நிலையில் தமது போராட்ட வடிவத்தை மாற்றுவதற்கு அவர்கள் தீர்மானித்துள்ளனர். மாவட்ட மட்டத்தில் அரச நிர்வாகக் கட்டமைப்புகளை முடக்கிப் போராட்டம் அடுத்த கட்டத்துக்கு நகர்த்தப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வெளிப்படுத்தலையும், விடுதலையையும் வலியுறுத்தி அவர்களின் உறவினர்கள் வடக்கின் 4 மாவட்டங்களிலும், கிழக்கில் ஒரு மாவட்டத்திலும் தொடர் போராட்டங்களை நடத்துகின்றனர். வடக்கில் கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களிலும், கிழக்கில் திருகோணமலையிலும் போராட்டம் நடத்தப்படுகின்றது.
கிளிநொச்சியில் 47 ஆவது நாளாகவும், வவுனியாவில் 43 ஆவது நாளாகவும், முல்லைத்தீவில் 31ஆவது நாளாகவும், யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு – மருதங்கேணியில் 24 ஆவது நாளாகவும், திருகோணமலையில் 34 ஆவது நாளாகவும் போராட்டங்கள் தொடர்கின்றன.
“47 நாட்களாகப் பெரும் இடருக்கு மத்தியில் போராட்டம் நடத்துகின்றோம். காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் தீர்க்கமான முடிவை எதிர்பார்த்தே போராட்டம் நடத்துகின்றோம். இதுவரை எந்தவிதமான தீர்வும் கிட்டவில்லை. எமது போராட்ட வடிவத்தை எதிர்வரும் நாட்களில் மாற்றவுள்ளோம். மாவட்ட மட்ட அரச நிர்வாகக் கட்டமைப்பை முடக்கிப் போராடுவதற்குத் தீர்மானித்துள்ளோம்” – என்று கிளிநொச்சியில் போராட்டம் நடத்தி வரும் மக்கள் தெரிவித்தனர்.