புதிய அரசியலமைப்புக்கான வழி நடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மீதான மூன்று நாள் விவாதத்தின் இறுதி நாள் இன்றாகும்.
இறுதி நாளான இன்றைய தினத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், மக்கள் விடு தலை முன்னணியின் தலைவரும் எதிர்க்கட்சி பிரதம கொறடாவுமான அநுரகுமார திஸாநாயக்க எம்.பி., ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரிஷாத் பதியூதீன், ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா எம்.பி., தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் அமைச்சர் மனோ கணேசன் ஆகி யோர் முக்கிய உரைகளை ஆற்றவுள்ளனர்.
இதேவேளை கூட்டு எதிர்க்கட்சியின் சார்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ எம்.பி.யும் உரையாற்றுவாரென கூட்டு எதிரணி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
புதிய அரசியலமைப்புக்கான வழி நடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மீதான விவாதம் நேற்று முன்தினம் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில் விமல் வீரவன்ஸ எம்.பி. தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி தவிர்ந்த ஏனைய பாராளுமன்ற அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு பல்வேறு கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.
குறிப்பாக பிரதிநிதிகளின் கருத்துக்கள் மற்றும் தனிப்பட்ட நிலைப்பாடுகள் ஆகியவற்றை மையப்படுத்தி கட்சிகளின் தலைவர்கள் தமது உரைகளை ஆற்றவுள்ளதோடு இடைக்கால அறிக்கையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வது குறித்தும் உறுதியான நிலைப்பாட்டினை வெளிப்படுத்தும் வகையிலான கருத் துக்களை வெளிப்படுத்துவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.