தமிழரசுக்கட்சியின் நிறுவுனர் தந்தை செல்வநாயகத்தின் 40ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வுகள் தமிழரசுக்கட்சியின் பட்டிருப்புக்கிளையின் ஏற்பாட்டில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மட்டக்களப்பு, களுதாவளை கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இதன்போது ‘ஜெனீவா தீர்மானமும் ஈழத்தமிழர் அரசியலும்’ எனும் தலைப்பில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நினைவுப் பேருரை ஆற்றவுள்ளார்.
நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறப்புரையாற்றவுள்ளார். அதேவேளை, தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜா, ‘தந்தை செல்வா’ எனும் தலைப்பில் உரையாற்றவுள்ளார்.
மேற்படி நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்துக்கொண்டு தந்தை செல்வாவின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தவுள்ளதுடன், நினைவுச்சுடரும் ஏற்றிவைக்கப்படவுள்ளது.