கடந்த 2008 – 2009ஆம் ஆண்டுகளில் கொழும்பு வெள்ளவத்தை மற்றும் அதன் புறநகரப் பகுதிகளில் 11 தமிழ் இளைஞர்களை கடத்தி காணாமல் செய்தமை தொடர்பாக, கடற்படையின் முக்கிய அதிகாரி ஒருவரை கைதுசெய்வதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த குற்றப்புலனாய்வுப் பிரிவினர், கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 5 கடற்படை அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், பிரதான சந்தேகநபரை கைதுசெய்வதற்கான தாமதம் குறித்து வினவிய நீதவான் லங்கா ஜயரத்ன இவ் உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதேவேளை, இக் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் கடற்படையின் முன்னாள் பேச்சாளர் டி.கே.பி.தசநாயக்கவிடம் ஏற்கனவே குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்தியிருந்த நிலையில், அவரையும் கைதுசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.