Sunday , June 29 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / சர்வதேச நீதிபதிகள் விடயத்தில் விட்டுக்கொடுக்காது கூட்டமைப்பு! – மங்களவின் கருத்துக்கு சுமந்திரன் பதிலடி

சர்வதேச நீதிபதிகள் விடயத்தில் விட்டுக்கொடுக்காது கூட்டமைப்பு! – மங்களவின் கருத்துக்கு சுமந்திரன் பதிலடி

சர்வதேச நீதிபதிகள் விடயத்தில் விட்டுக்கொடுக்காது கூட்டமைப்பு! – மங்களவின் கருத்துக்கு சுமந்திரன் பதிலடி

“சர்வதேச நீதிபதிகள் விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விட்டுக் கொடுப்புக்குத் தயாரில்லை. சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணைகளைச் செய்வதற்கு அரசமைப்பில் எந்தத் தடையும் இல்லை. அப்படி ஏதாவது தடை இருக்கின்றது என்றால் அந்தத் தடையை நீக்கி விட்டு அதனைச் செயற்படுத்துங்கள்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அந்தக் கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கொழும்பில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில், போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்குவதற்கு அரசமைப்பில் இடமில்லை என்று குறிப்பிட்டிருந்தார். அத்துடன் உள்ளகப் பொறிமுறையின் ஊடாகவே விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை வினவியபோதே சுமந்திரன் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“2015 ஆம் ஆண்டு கலப்பு பொறிமுறை ஐ.நா. தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டது. இதற்கு நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, இலங்கை அரசமைப்பில் வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்டு விசாரிக்க இடமில்லை என்று குறிப்பிட்டார். அவ்வாறு விசாரணை செய்யலாம் என்று நான் குறிப்பிட்டேன். வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, நான் சட்டத்தரணி அல்ல. விஜயதாஸ ஒரு வழி சொல்கின்றார். சுமந்திரன் ஒரு வழி சொல்கின்றார். எனக்குத் தெரியவில்லை என்று குறிப்பிட்டார்.

அமெரிக்காவின் இரண்டு நிபுணர்கள் உடனடியாக ஜெனிவாவுக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் இலங்கை அரசமைப்பில், வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணைகளை மேற்கொள்ள முடியுமா என்பதை ஆராய்ந்தனர். இறுதியில், இப்போதைய இலங்கை அரசமைப்பிலேயே அதனைச் செய்ய முடியும் என்று குறிப்பிட்டனர். இதனை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் ஏற்றுக்கொண்டார். ஏன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூட, இவ்வாறான விசாரணைகள் ஏற்கனவே நடைபெற்றமைக்கான முன்னுதாரணங்கள் உள்ளன என்று குறிப்பிட்டிருந்தார்.

பிரதம நீதியரசருக்கு எதிரான கடந்த கால விசாரணையின்போது பொதுநலவாய நீதிபதிகளை உள்ளடக்க எல்லோரும் இணங்கியிருந்தனர்.

வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணைப் பொறிமுறையை இப்போதைய அரசமைப்பின் ஊடாகச் செய்வதில் எந்தத் தடையும் இல்லை. அப்படியே தடை இருக்குமாக இருந்தால் அதனை நீக்குங்கள். அரசமைப்பில் மாற்றத்தைச் செய்யுங்கள். இலங்கை அரசு பொறுப்புக்கூறலில் தான் ஏற்றுக்கொண்ட விடயத்தை செய்தே ஆக வேண்டும். இதில் எந்தவொரு விட்டுக் கொடுப்புக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாரில்லை” – என்றார்.

Visit Our Sites:

Tamilnewsstar.com

Tamilaruvi.news

Tamilaruvi.tv

Tamilaruvimedia.com

Tamil24news7.com

Tamilpriyam.com

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …