தற்போதைய ஆட்சியில் சாதகமான பல முன்னேற்றங்கள் நடைபெற்று, ஈழத் தமிழரின் அரசியல் நகர்வு ஒரு திருப்புமுனையில் நகர்ந்துகொண்டிருக்கின்றது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு களுதாவளை கலாசார மண்டபத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற தந்தை செல்வாவின் 40ஆவது நினைவுதின நிகழ்வில், ‘ஜெனீவாத் தீர்மானமும் ஈழத் தமிழர் அரசியலும்’ எனும் தலைப்பில் உரையாற்றிய போதே அவர் மேற்குறித்தவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றியபோது-
”எல்லோரும் எங்களைக் கைவிட்டு விட்டார்கள் என்கின்ற ஒப்பாரி இப்பொழுதும் நடந்து கொண்டே இருக்கின்றது. ஆனால், உண்மை அதுவல்ல. யாரும் எங்களைக் கைவிடவில்லை. எங்களுக்குச் சாதகமான எத்தனையோ விடயங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன.
ஐ.நா சபை, சர்வதேசம், அமெரிக்கா உட்பட எவரும் எங்களைக் கைவிடாததால் ஈழத் தமிழரின் அரசியல் இப்பொழுது திருப்பு முனையில் வந்து நிற்கிறது என்பதையிட்டு எமக்கு மகிழ்ச்சி.
கடந்த 1950ஆம் 51ஆம் ஆண்டிலே ஆரம்பித்த அந்தப் பயணம், படிப்படியாக இன்றைக்கு இந்த அளவுக்கு வந்து முன்னேற்றம் கண்டிருக்கின்றது. மிக முக்கியமாக அரசியல் தீர்வொன்று வழங்கப்பட வேண்டும், புதிய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்கின்ற விடயங்களுக்கு இலங்கை அரசாங்கம் கடந்த 2015 ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதி ஐ.நா. பேரவையில் உத்தரவாதமளித்துள்ளது.
இலங்கையிலே இதற்கு முன்னர் இடம்பெற்ற அத்தனை விடயங்களும் மீண்டும் நிகழாமல் இருப்பதற்கான உத்தரவாதமும் தரப்பட்டிருக்கிறது. புதிய அரசியலமைப்பிலே தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றியும் உத்தரவாதம் அளிக்கப்பட்டிருக்கின்றது.
இவ்வாறு, முன்னர் நடந்திருக்காத இந்த விடயங்கள் சர்வதேச மட்டத்திலே நடந்தேறியிருக்க, இங்கே ஒன்றுமே நடக்கவில்லை என்று கூப்பாடு போடுவது சரியல்ல. இத்தகைய முன்னேற்றங்களோடு ஈழத் தமிழரின் அரசியல் நகர்வு சென்று கொண்டிருக்கின்றது” என்றார்.