வடமாகாண சபை மீது ஆளும்கட்சி உறுப்பினர் சுகிர்தன் பகிரங்க குற்றச்சாட்டு
வடமாகாண இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்பை தட்டிக்கழித்ததே வட மாகாண சபை இதுவரை செய்த பெரும் சாதனை என வடமாகாண சபையின் ஆளும்கட்சி உறுப்பினர் ச.சுகிர்தன் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
யாழ். மாவட்ட செயலகம் முன்பாக தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள வடமாகாண வேலையற்ற பட்டதாரி மாணவர்களுக்கு தனது ஆதரவை தெரிவிக்கும் வகையில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடக அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் நியாயமானது. இப்போராட்டத்தின் நியாய தன்மையை அரசியல்வாதிகள் கருத்திற் கொண்டு, மாகாண சபையும் மத்திய அரசும் அவர்களது கோரிக்கைக்கு சாதகமான பதிலை வழங்கவேண்டும்.
இவர்கள் கடந்த வருடம் பாரிய போரட்டத்தை செய்த போது வட மாகாண சபை, அப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்து அத்துடன் பல வாக்குறுதிகளையும் வழங்கியது. ஆனால் கல்வி அமைச்சை தவிர ஏனைய நான்கு அமைச்சுகளும் இவர்களது வேலைவாய்ப்பில் அக்கறை செலுத்தியதாக தெரியவில்லை.
உண்மையில் இவர்கள் ஏதாவது நடவடிக்கை எடுத்திருந்தால் அதன் முன்னேற்றத்தினை போராட்டத்தில் ஈடுபடும் பட்டதாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும். மாகாணசபை உருவாக்கப்பட்டு 3 வருடங்கள் முடிவடைந்த நிலையில் வட மாகாண இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க கூடிய எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




