லசந்த விக்கிரமதுங்க படுகொலை : குற்றவாளிக்கு விரைவில் தண்டனை: சுஜீவ சேனசிங்க
சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும், சிரேஸ்ட ஊடகவியலாளருமான லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள மரண அறிக்கையை வைத்து விசாரணைகளை மேற்கொள்ள நல்லாட்சி அரசாங்கம் தயாராக உள்ளதாக இராஜாங்க நீதியமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தப் படுகொலையை மேற்கொண்ட ராஜபக்சவினர், அன்று இந்த சம்பவத்தை பெரிதுபடத்த வேண்டாம் என்று உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகங்களை அறிவுறுத்தியிருந்ததாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.
2009 ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க தொடர்பான வழக்கு விசாரணை கல்கிஸை நீதவான் நீதிமன்றத்தில் இறுதியான இடம்பெற்றபோது, இதுவரை வெளிவராத சில சாட்சியங்கள் மன்றில் சமர்பிக்கப்பட்டன.
அரச புலனாய்வுப் பிரிவில் சேவையாற்றிய முன்னாள் பணிப்பாளரான மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவித்தாரணவினால் செயற்படுத்தப்பட்ட ஒரு குழுவே இப்படுகொலையை செய்தது என்று குற்றப் புலனாய்வுத் திணைக்களம்; அறிவித்தது.
மேலும் கூறிய ஆயுதத்தால் தலையில் தாக்கப்பட்டே லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் மன்றில் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஊடகவியலாளர்களால் இதுகுறித்து வினா எழுப்பப்பட்டது.
இதன்போது உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க “லசந்த விக்கிரமதுங்க துப்பாக்கியால் சுடப்பட்டே படுகொலை செய்யப்பட்டார் என்று ஏற்கனவே மரண பரிசோதனை அறிக்கையூடாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கூறிய ஆயுதத்தால் தாக்கப்பட்டே அவர் கொல்லப்பட்டுள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. லசந்த கொல்லப்பட்டபோதே இவர் துப்பாக்கியால் சுடப்பட்டல்ல, மாறாக பன்றிகளைக் கொல்லும் ஒரு வித்தியாசமான கூறிய ஆயுதத்தால் தாக்கப்பட்டே கொல்லப்பட்டுள்ளார் என்று நாம் கூறியிருந்தோம். ஆனால், இதுகுறித்து அப்போது கண்டுக்கொள்ளப்படவில்லை.
என்னைக் கேட்டால் இந்த படுகொலையின் பின்னணியில் ராஜபக்சக்களே இருக்கிறார்கள் என்றும் உறுதியாகக் கூறமுடியும். இவர்களைத் தவிர இக்கொலையை செய்ய வேண்டிய தேவை வேறு யாருக்கு அப்போது இருந்தது? எமது அரசில் ஒரு கொலைக் குழு இயங்கிவந்தாலும் அதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமரே பொறுப்புக் கூற வேண்டும். அந்தவகையில், லசந்தவை கொலை செய்த அந்தக் கொலைக் குழுவின் பின்னணியில் ராஜபக்சக்களே இருக்கிறார்கள் என்பதை எம்மால் நிச்சயமாக கூறமுடியும். அதேநேரம், இவ்விடயத்தை பெரிதுப்படுத்த வேண்டாம் என்று உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகங்களுக்கும் இவர்களால் அப்போது அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் நாம் இவ்விடயத்தை அவ்வளவு எளிதில் விடமாட்டோம். லசந்தவின் படுகொலையில் வெளிவந்துள்ள இந்த இரண்டு மரண அறிக்கைகள் தொடர்பிலும் தீவிரமாக விசாரணைகளை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனைப் பெற்றுக் கொடுப்போம். லசந்தவின் விவகாரம் மட்டுமன்றி தாஜுடீனின் மரணம் மற்றும் ஏனைய ஊடகவியலாளர்களின் கொலை மற்றும் தாக்குதல்கள் குறித்தும் விசாரணைகளை மேற்கொள்வோம்” என்றார்.

