“சிறுபான்மையினருக்கு எதிரான அட்டகாசங்கள் தலை விரித்தாடுகின்றபோது சட்டத்தை அமுல்படுத்த முடியாத அரசாங்கம் இனவாதத்திற்குப் பணிந்து கைகட்டி நிற்கிறது” என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபைர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, ஏறாவூர் நகர பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் ஏறாவூர் நகர பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் இன்று (திங்கட்கிழமை) பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மத் ஹனீபா தலைமையில் இடம்பெற்றபோது உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நல்லாட்சி அரசாங்கத்தின் ஆளுகையின் கீழ் தற்போது ஒரு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இனங்களுக்கு மத்தியிலே முறுகலை ஏற்படுத்திக் கொண்டு திரியும் நாசகாரக் கும்பல்களைக் கைது செய்து நாட்டின் உயர் மதிப்பு மிக்க சட்டங்களை அமுல்படுத்த முடியாத கையறு நிலையில் ஆளும் தரப்பு உள்ளது.
இந்த நிலைமை நாட்டிலுள்ள சிறுபான்மை இனங்கள் மத்தியில் ஒரு வித அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் அதியுயர் பொறுப்பிலுள்ள ஜனாதிபதி எந்தத் தீர்மானத்தையும் எடுக்காமல் கைகட்டிப் பார்த்திருக்கும் நிலையை சிறுபான்மை மக்கள் ஒரு வித ஆதங்கத்தோடு அவதானித்துக் கொண்டிருக்கின்றார்கள்” என எம்.எஸ். சுபைர் மேலும் தெரிவித்தார்.