உடலளவில் பலவீனமாக இருந்தாலும், உள்ளத்தில் தைரியமாகவே இருப்பவர்களே மாற்றுத்திறனாளிகள். இவர்களுக்குள் பல்வேறு திறமைகள் மறைந்துள்ளன.
இதனை பார்க்காமல் உடல் குறையை மட்டும் வைத்து, அவர்களுக்கான வாய்ப்பு மறுக்கப்படுகிறது. அவர்களின் பிரச்னைகளை புரிந்து கொண்டு, உரிமை, வசதிகளை வழங்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் 1992 முதல் டிச.3ம் தேதி, ‘சர்வதேச மாற்று திறனாளிகள் தினம்’ கடைபிடிக்கப்படுகிறது.
‘மாற்றத்தின் மூலம் நிலையான மற்றும் மகிழ்ச்சியான சமூகத்தை அனவருக்கும் உருவாக்குவோம்’ என்பது இந்தாண்டு மையக்கருத்து. மேலை நாடுகளில் குறைபாடு வெளியே தெரிய வேண்டும் என்ற அவசியமில்லை. ஒரு நுரையீரல், ஒரு சிறுநீரகத்துடன் வாழ்பவர்களை கூட மாற்றுத் திறனாளியாகவே கருதுகின்றனர்.
ஒரு நாடு வளர்ச்சியடைய மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை ஏற்காமல், வளர்ந்த நாடாக மாற்ற முடியாது என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
சமூகத்தின் இரங்கல் பார்வையை பெற்றுக்கொண்டு, இவர்கள் ஒதுங்கி வாழ வேண்டும் என நினைப்பது தவறு. நாட்டின் முன்னேற்றத்தில் இவர்களது பங்கேற்பை ஏற்க வேண்டும். வேலைவாய்ப்பில் அவர்களுக்குரிய நியாயமான உரிமையை வழங்க வேண்டும்.
உலகில் 65 கோடி பேர் மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர். உலகில் உள்ள ஏழைகளில் 20 சதவீதம் மாற்றுத் திறனாளிகள்.
இலங்கையில் 1.6 மில்லியன் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இலங்கையில் உள்ள மொத்த மாற்றுத்திறனாளிகளில் 996, 936 பேர் பார்வை குறைபாட்டுடனும் 734, 213 பேர் கால்கள் ஊனமாகவும் 389, 077 பேர் செவி ஊனமாகவும் 343, 689 பேர் உளவள பிரச்சினைகள் உள்ளவர்களாகவும் 197575 சுய பாதுகாப்பு இல்லாதவர்களாகவும் காணப்படுகின்றனர்.