“வடக்கு, கிழக்கு இணைந்த தமிழர் தாயகம் அங்கீகரிக்கப்பட்ட சுயாட்சியை ஏற்றுக்கொண்ட அரசமைப்பு இலங்கையில் உருவாக்கப்பட வேண்டும்.”
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி நகர வர்த்தகர்களுடனான கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்டக் காரியாலயமான அறிவகத்தில் நடைபெற்றது.
அங்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
“தமிழ் பேசும் மக்கள் மிகுந்த அவதானமாக இருக்க வேண்டும். இலங்கை நாடானது பல்லின மக்களைக் கொண்டுள்ள ஒரு நாடாகும்.
நாட்டில் வாழும் சகல இனத்தவர்களும் இந்நாட்டுப் பிரஜைகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அவர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வகையிலான அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.
இங்கு வாழும் இனத்தவர்களையோ அல்லது ஒரு மதத்தவர்களையோ முதன்மைப்படுத்தி ஏனையவர்களை சிறுமைப்படுத்தி உரிமைகளை மறுக்கின்றதாக அரசமைப்பு அமையக்கூடாது.
நாட்டில் வாழும் மக்களது அமைதிக்கும், நிலைத்திருப்புக்கும் சகல இன மக்களையும் கருத்தில்கொண்டு அவர்களுக்குரிய உரிமைகளை வழங்கக்கூடிய வகையில் அமைந்த அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.
ஓர் இனத்தையும் மதத்தையும் முதன்மைப்படுத்தி இன்னொரு இனமக்களை அடக்கி ஒடுக்கி அடிமைப்படுத்த முற்பட்டதன் விளைவே இந்நாட்டின் இனப்பிரச்சினைக்கான முக்கிய காரணமாக அமைந்தது.
இப்படியான பாரிய பிழைகள் இனிவரும் அரசமைப்பிலும் இடம்பெறுமாகவிருந்தால் அதன் விளைவுகள் இதுவரை நடந்தவற்றையும் விடவும் மிகமோசமானதாகவே அமையும்.
இதில் இந்த அரசு கூடிய கவனம் செலுத்த வேண்டும். இலங்கையின் புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கையில் பல்வேறுபட்ட குறைபாடுகளும் அதனால் ஏற்பட்ட குழப்ப நிலைகளும் காணப்படுகின்றன. இதனைப் பல்வேறு தரப்பினரும் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.
புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கையில் என்ன உள்ளது என்பது பற்றி தமிழ் மக்கள் அறிந்துகொள்ள வேண்டும்.
புதிய அரசமைப்பு உருவாக்கத்தின்போது மக்கள் வாக்கெடுப்புக்கு வரும்போது அதற்குத் தகுந்த முறையில் முகங்கொடுக்கத் தயாராக இருக்கவேண்டும்.
இந்த நாட்டில் வடக்கு, கிழக்கு என்பது தமிழ் மக்கள் காலங்காலமாக வாழ்ந்துவரும் தமிழர்களின் பூர்வீக தாயகமாகும்.
எந்த அரசமைப்பு வந்தாலும் வடக்கு, கிழக்கைக் கூறுபோடாத வகையிலான வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்ததான தமிழர் தாயகத்தில் தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே ஆளக்கூடிய சுயாட்சியை ஏற்றுக்கொண்டதான அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்ட வரைபு உள்வாங்கப்பட வேண்டும்” – என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை, கிளிநொச்சி நகர வர்த்தகர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு இடைக்கால அறிக்கை தொடர்பான கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.