உண்மையைக் கண்டறிதல், பொறுப்புக்கூறுதல் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பில் அனைத்துலக சமூகத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இலங்கை அரசு ஆமைவேகத்தைக் கடைபிடித்துவருவதால் ஐ.நா. சிறப்பு அறிக்கையாளரால் இன்றைய தினம், இலங்கை அரசுக்குக் கடுந்தொனியிலான செய்தியொன்று விடுக்கப்படும் என்றும், அதுவே ஐ.நாவின் இறுதி எச்சரிக்கையாகக்கூட அமையலாம் என்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்களும், சமூக ஆய்வாளர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இரண்டுவார கால பயணத்தை மேற்கொண்டு இலங்கை வந்திருந்த உண்மையை ஊக்குவித்தல், நீதி, இழப்பீடு மற்றும் மீள நிகழாமையை உத்தரவாதப்படுத்துவதற்கான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிரெசப், முக்கியத்துவமிக்க சந்திப்புகளை நடத்தியிருந்தார்.
ஆளுங்கட்சியினர், எதிர்க்கட்சியினர், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், காணாமல்போனவர்களின் உறவினர்கள், மதத் தலைவர்கள் என பல்துறையினரையும் சந்தித்து விரிவாகக் கலந்துரையாடியிருந்தார்.இந்நிலையில் தனது பயணத்தின் இறுதியாக இன்றைய தினம் கொழும்பில் வைத்து அவர் ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தவுள்ளார். இதன்போதே இலங்கைக்கு அவர் எச்சரிக்கை சமிக்ஞையொன்றை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நல்லிணக்கத்தை மட்டும் முன்னிறுத்தவதை விடுத்து பொறுப்புக் கூறல் உட்பட அனைத்து விடயங்களும் சம அளவில் முன்கொண்டு செல்லப்படவேண்டும் என்றும், அவ்வாறு இல்லையேல் அனைத்துலக சமூகம் அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்குமென்பதே அவரின் எச்சரிக்கைச் செய்தியாக இருக்குமெனவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
இலங்கையில் பப்லோ நடத்திய முத்தரப்பு சந்திப்பின்போதும், இலங்கை அரசின் செயற்பாடுகள் திருப்தியில்லையென்றும், அது இன்னும் வேகப்படுத்தப்படவேண்டும் என்றும் பகிரங்கமாகவே குறிப்பிட்டிருந்தார். அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், சில சிவில் அமைப்புகளும் வாக்குறுதிகளை இலங்கை அரசு நிறைவேற்றுவதில்லை என சுட்டிக்காட்டியிருந்தனர்.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே பப்லோவின் இன்றையசெய்தியாளர் சந்திப்பு அனைவரினதும் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அத்துடன், தனது பயணம் குறித்து அவர் ஐ.நாவில் அறிக்கையொன்றையும் சமர்ப்பிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.