இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை இவ்வருடத்தினுள் கைச்சாத்திட எதிர்பார்ப்பதாக சீனப் பிரதமர் லீ கெகியான் தெரிவித்துள்ளார்.
‘ஒரே பிராந்தியம் ஒரே பாதை’ திட்ட மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சீனா சென்றிருந்த பிரதமர் ரணிலை பீஜிங் நகரில் சந்தித்து கலந்துரையாடியபோதே சீன பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
போக்குவரத்து, நிதி, வணிகம் போன்ற துறைகளை அடிப்படையாகக்கொண்டு, இந்து சமுத்திரத்தின் கேந்திர நிலையமாக இலங்கையை முன்னேற்றுவதற்கு தேவையான ஒத்துழைப்பு மற்றும் உதவியை இலங்கைக்கு வழங்க சீனா தயாராகவுள்ளது என்றும் கூறியுள்ளார்.
அதற்குத் தேவையான முதலீட்டுச் சூழலை இலங்கையில் உருவாக்க வேண்டும் என்றும் நிலைபேறான ஸ்திரத்தன்மை மற்றும் பலமான சட்டக் கட்டமைப்பு உருவாகுமாயின், உலகின் அதிகமான முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வார்கள் என்றும் சீன பிரதமர் கூறியுள்ளார்.
மேலும், இலங்கையில் தொழில்களை ஆரம்பித்தல் மற்றும் முதலீடுகளை மேற்கொள்வதற்கு சீன நிறுவனங்களை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்த வருடம் இலங்கையின் அபிவிருத்திச் செயற்றிட்டங்களுக்கு வழங்கும் 400 மில்லியன் சீன யுவான் நிதி உதவிக்கு மேலதிகமாக, 2018 – 2020 காலப்பகுதிக்கு 2 பில்லியன் சீன யுவான் நிதி உதவியை இலங்கைக்கு வழங்கவுள்ளதாக ஜனாதிபதி சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.