திருகோணமலை சம்பூரில் இயற்கை எரிவாயு மின் நிலையத்தை அமைப்பதற்கு பல்வேறு எதிர்ப்புகள் வெளியாகி வந்த நிலையில், அதற்கு பதிலாக 50 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின்சக்தி நிலையத்தை அங்கு அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
சூழலின் பசுமைக்கு தாக்கம் ஏற்படுத்தும் என்பதாலேயே இயற்கை எரிவாயு திட்டத்தை கைவிட்டு, மாற்று திட்டத்தை முன்னெடுப்பதாக மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய நேற்று (செவ்வாய்க்கிழமை) நடத்திய செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
சம்பூரில் அனல் மின் நிலையத்தை அமைப்பதற்கு அப்பிரதேச மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வந்த நிலையில், அங்கு இயற்கை எரிவாயு மின் நிலையத்தை அமைப்பதற்கு இந்தியா மற்றும் ஜப்பானிடம் இருந்து இரண்டு முன்மொழிவுகள் பெறப்பட்டன. எனினும் இதனால் சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதோடு, பல்வேறு பிரச்சினைகள் காணப்படுவதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் குற்றஞ்சாட்டி வந்தனர். இந்நிலையில், சூரிய மின்சக்தி நிலையத்தை அமைப்பதென அரசாங்கம் தீர்மானித்துள்ளது.