தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிளவடைந்தால் அரசியலமைப்பு உருவாக்கத்தில் தடைகளை ஏற்படுத்தலாம் என்று சிங்கள பேரினவாத சக்திகளும், அரசாங்கத்திற்குள்ளேயே இருக்கும் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ள நிலையில், கூட்டமைப்பை கூறுபோட ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிதறுண்டால் அது தமிழ் மக்களுக்கு ஒரு பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் எனக் சுட்டிக்காட்டியுள்ள சித்தார்த்தன், தமிழ் தரப்பு மீது பழியைப் போட்டுவிட்டு தப்பிக்கும் வழிகளை அரசாங்கமும் தேடிக்கொண்டிருக்கின்றது எனவும் இதற்கு சந்தர்ப்பம் வழங்கக் கூடாதெனவும் மேலும் தெரவித்துள்ளார்.
அண்மைய அரசியல் நிலவரங்கள் தொடர்பாக அவர் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் தலைமைகளின் தவறினாலேயே தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்க முடியாமல் போனதென சர்வதேசத்திற்கு காட்டுவதற்கு அரசாங்கம் சந்தர்ப்பம் பார்த்திருக்கின்றது என்று குறிப்பிட்டுள்ள சித்தார்த்தன், இவ்வாறு நடக்குமாயின் அரசுக்கு அது பாரிய வெற்றியாக அமைந்துவிடும் என்றும், சர்வதேசத்தின் ஆதரவினை தக்கவைத்துக்கொள்ள வேறுபாடுகளை களைந்து ஒன்றுபட்டு செயற்பட வேண்டுமெனவும் குறித்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.