வட மாகாண சபை அவை தலைவர் மற்றும் பிரதி அவை தலைவர் சபையில் இல்லாத நிலையில், சபையை தலைமை தாங்கும் அதிகாரம் வடமாகாண சபை உறுப்பினர்கள் இருவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
வடமாகாண சபையின் 90 ஆவது அமர்வு இன்றைய தினம் பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போதே, மாகாண சபை உறுப்பினர்களான எம்.கே. சிவாஜிலிங்கம் மற்றும் ஜி.ரி. லிங்கநாதன் ஆகியோருக்கு அவைத் தலைவர் சீ.வி.கே. சிவஞானம் இந்த அதிகாரத்தை வழங்கியுள்ளார்.
இதேவேளை, கடந்த அமர்வில் அவைத் தலைவரும் பிரதி அவைத் தலைவரும் சபை ஆரம்பிக்கும் போது சபையில் இல்லாத நிலையில் சபை ஆரம்பிப்பதற்கு நேரம் தாமதமாகியமையைத் தொடர்ந்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வடமாகாண சபை 355 தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளதாகவும் அவை பொறுப்புவாய்ந்த தரப்புக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயங்கள் முன்னேற்ற அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் முன்னேற்ற அறிக்கை மாகாண சபையில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே என்ன செய்கிறீர்கள்? என்ன செய்துள்ளீர்கள்? எனக் கேட்பவர்கள் முதலில் அந்த முன்னேற்ற அறிக்கையை பார்த்துவிட்டு பேச வேண்டும் என்றும் வட மாகாண அவைத் தலைவர் தெரிவித்துள்ளார்.