“ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு அடைக்கலம் தேடிவருபவர்களை விரட்டியடிப்பது சர்வதேச அகதிகள் சட்டத்தின்படி மாபெரும் குற்றமாகும். எனவே, மியன்மாரில் அரங்கேற்றப்பட்டுள்ள இனப்படுகொலை நடவடிக்கையையடுத்து அங்கிருந்து அடைக்கலம் தேடி இலங்கை வந்துள்ள ரோஹிங்யா முஸ்லிம் மக்களைப் பாதுகாப்பது அரசின் கடமையாகும்.”
– இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன்.
கொழும்பில் ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் மீது பௌத்த பிக்குமாரும், சிங்கள இனவாதிகளும் நடத்திய அராஜகச் செயற்பாடுகள் குறித்து “சுடர் ஒளி’யிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாட்டில் இனவாதச் செயற்பாடுகளில் ஈடுபடும் சிலர், அகதிகளாக இலங்கை வந்துள்ள ரோஹிங்யா முஸ்லிம் மக்களை விரட்டியடிக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர். இது ஏற்றுக்கொள்ளமுடியாது. இந்த நடவடிக்கை ஐ.நாவின் சர்வதேச அகதிகள் சட்டத்துக்கு முரணானது.
இலங்கை வந்துள்ள ரோஹிங்யா முஸ்லிம் மக்களுக்கு அகதி அந்தஸ்து வழங்கி அவர்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதுஅரசின் கடமையாகும். இந்தக் கடமையை நிறைவேற்றுவதற்கான உரிய நடவடிக்கையை அரசு எடுக்கவேண்டும். அந்த மக்களுக்கு மனிதநேயத்தின் அடிப்படையில் உதவவேண்டும்.
நாட்டில் இந்த ஆட்சியிலும் இடையிடையே இனவாதச் செயற்பாடுகள் அரங்கேறுகின்றன. நாட்டின் அமைதியையும் நல்லிணக்கத்தையும் குழப்பியடிக்கும் இந்தச் செயற்பாடுகளுக்கு அரசு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்” – என்றார்.