நெவில் பெர்ணான்டோ போதனா வைத்தியசாலையை சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வந்து அதனை போதனா வைத்தியசாலையாக நடத்திச் செல்ல தேவையான நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக, அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி சர்ச்சை குறித்த தீர்வு திட்டம் இன்று அரசாங்கத்தால் வௌியிடப்படும் என முன்னதாக பாராளுமன்றத்தில் அவர் கூறியிருந்தார்.
இதற்கமைய சட்டமா அதிபரின் அனுமதியுடன் இலங்கை வைத்திய சபையால் முன்வைக்கப்பட்ட இலங்கை வைத்திய கல்வி குறித்த குறைந்த பட்ச தகைமைகள் சுகாதார அமைச்சினால் வர்த்தமானியில் வௌியிட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
மேலும், சயிடம் தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்பை நிறைவு செய்தவர்களுக்கான மருத்துவப் பயிற்சிகளை அவிசாவளை மற்றும் ஹோமாகமவில் வழங்கவும் யோசனை முன்மொழியப்பட்டுள்ளது.
இந்தப் பயிற்சிகளின் பின்னர் இலங்கை வைத்திய சபை மற்றும் பல்கலைக்கழக ஆணைக்குழு ஆகியவற்றின் மேற்பார்வையின் கீழ் இடம்பெறும் பரிசோதனைகளுக்கு அவர்கள் முகம்கொடுக்க வேண்டும் எனவும் முன்மொழியப்பட்டுள்ளது.