தமது பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிளிநொச்சி இரணைதீவு மக்களுக்கு எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் தீர்வினை பெற்றுத்தருவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன உறுதியளித்துள்ளார்.
கிளிநொச்சிக்கு இன்று (புதன்கிழமை) விஜயம் செய்துள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட குழுவினர், இரணைமாதா நகரில் கடந்த 69 நாட்களாக பேரராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களுடன் கலந்துரையாடினார்.
இதன்போது, ஜனாதிபதியே நாட்டின் பாதுகாப்பு அமைச்சராக உள்ள நிலையில், தம்மால் உடனடியாக தீர்வினை வழங்க முடியாதென குறிப்பிட்ட பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், இரு வாரங்களுக்குள் தீர்வினை பெற்றுத்தருவதாக குறிப்பிட்டுள்ளார்.
இச் சந்திப்பில் சிறுவர் – மகளிர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எஸ்.சிறிதரன், மாவட்ட மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.