இந்தியாவின் தமிழகத்திலுள்ள அகதி முகாம்களில் தங்கியிருந்த இலங்கை அகதிகளில் 46 பேர் இன்று (வியாழக்கிழமை) நாடு திரும்பியுள்ளனர்.
ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலக வசதிப்படுத்தலுடன், குறித்த அகதிகள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 1990ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட யுத்த சூழ்நிலை காரணமாக இந்தியாவின் தமிழ்நாட்டில் தஞ்சமடைந்து முகாம்களில் வாழ்ந்துவந்த கண்டி, கொழும்பு, முல்லைத்தீவு, திருகோணமலை, கிளிநொச்சி, வவுனியா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 46 பேரே நாட்டு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அவர்களுக்கான வாழ்வாதார உதவிகள் செய்துகொடுக்கப்பட்டு, அவர்களை சொந்த இடங்களில் குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.