ஐ.நா. நிபுணரின் பரிந்துரைகளை ஸ்ரீலங்கா நடைமுறைப்படுத்தும் : ரவிநாத் ஆரியசிங்க
ஸ்ரீ லங்கா மனித உரிமைகள் விவகாரம் தொடர்பில் ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் ரீட்டா ஐசாக் நாடியா முன்வைத்துள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா அரசாங்கம் உறுதியளித்துள்ளதாக ஐ.நாவுக்கான ஸ்ரீலங்காவின் நிரந்தரப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.
ஐ.நாவின் சிறுபான்மையினரின் விடயங்கள் தொடர்பான சிறப்பு அறிக்கையாளர் ரீட்டா ஐசாக் நாடியா கடந்த வருடம் ஸ்ரீலங்காவிற்கு வருகை தந்திருந்தார்.
அப்போது, அவர் அவதானித்த விடயங்களை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அறிக்கையாக முன்வைத்தார்.
ரீட்டா ஐசாக் நாடியா அறிக்கை தொடர்பில் அவர் நேற்றைய தினம் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் பதிலளித்த போதே இதனை தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகள் பொறிமுறையில் ஸ்ரீலங்கா அர்ப்பணிப்புடனும் புதிய ஈடுபாட்டுடனும் செயலாற்றுகின்றது எனவும், மீள நிகழாமையை உறுதிப்படுத்தல் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாத்தல் போன்றன முன்னேற்றமடைந்துள்ள எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.