இந்தியாவும் இலங்கையும் ஒன்றிணைந்த கலை கலாசார அம்சங்களை கொண்டதாகக் காணப்படுகின்றதென கண்டி உதவி இந்தியத் தூதுவலராயத்தின் தூதுவர் இராதா வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.
இந்திய கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் 156 ஜனன தின நிகழ்வு கண்டி உதவி இந்தியத் தூதுவராயத்தின் பாரத கேந்திர நிலையத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சமூகங்களுக்கிடையிலான பரஸ்பர புரிந்துணர்வுக்கும் அறிவு மேம்பாட்டுக்கும் உந்து சக்தியாக மொழியே விளங்குகின்றதென குறிப்பிட்ட அவர், பேராதனை பல்கலைக்கழகத்தில் ஹிந்தி மொழி கற்கை நெறியினை ஆரம்பித்து தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் அதற்கான ஒழுங்குகளை செய்து தரவுள்ளதாகவும் மேலும் கூறினார்.
இந்த நிகழ்வில் பேராதனை பல்கலைக்கழக சிங்கள மொழித்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் நிமால் விஜயசிறி கலந்துகொண்டு, கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் பற்றி விசேட உரைநிகழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.