உலகலாவிய கடல் பயங்கரவாதம் பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தல் : பிரதமர் தெரிவிப்பு
உலகலாவிய கடல் பயங்கரவாதம் பொருளாதார அனுகூலங்களுக்கு அச்சுறுத்தல் விடுத்து வருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொள்கலன்களை ஏற்றிச் செல்லும் கப்பல்களில் பாதிக்கு மேற்பட்ட கடற்கலங்கள் இந்து சமுத்திரத்தின் ஊடாக பயணிக்கின்றன. இது ஆசிய, மத்திய கிழக்கு நாடுகளுக்கு பெரும் பொருளாதார அனுகூலத்தை ஏற்படுத்தும் விடயமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்திய தலைநகர் டெல்லியில் நேற்று ஆரம்பமான மாநாட்டில் ஸ்கைப் ஊடாக அவர் உரையாற்றிய போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் வலியுறுத்தியதாவது,
உலக பொருளாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் சமுத்திர பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த சகல நாடுகளும் கைகோர்க்க வேண்டும்.
இந்து சமுத்திர வலயத்தில் டிஜிட்டல் பயங்கரவாதம் தலைதூக்கி வருகிறது. இதன் மீது சகலரும் கவனம் செலுத்த வேண்டும். பயங்கரவாதத்தின் சகல வடிவங்களையும் ஒடுக்க நாடுகளுக்கு இடையில் நெருங்கிய ஒத்துழைப்பை ஏற்படுத்துவது அவசியமாகும்.
ஒருவரது பயங்கரவாதத்தை மற்றவரின் விடுதலையாக கருத முடியாது. பல்வேறு குழுக்களின் அழுத்தங்கள் மற்றும் அபிலாஷைகள் காரணமாக இந்துமா சமுத்திரத்தில் கடல் பயங்கரவாதம் தலைதூக்கி வருவதாகவும் பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தார்.

