விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் சடலத்தை கண்டு, தாம் மிகுந்த வேதனையடைந்ததாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி, வதோதராவில் நேற்று தொழில் அதிபர்களுடன் கலந்துரையாடினர். அப்போது, அதில் பங்கேற்றவர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு ராகுல்காந்தி பதில் அளித்தார்.
இந்த நிலையில், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டது குறித்து ராகுலிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், பிரபாகரனின் சடலத்தை பார்த்து, தாம் மிகுந்த வேதனை அடைந்ததாகக் கூறினார்.
இதுபற்றி, தமது சகோதரி பிரியங்காவிடம் பேசியபோது, அவரும் அதே மனநிலையில் இருந்ததாக ராகுல் குறிப்பிட்டார். மற்றவர்களது துயரங்களில் பங்குகொள்வதுதான், காந்தி குடும்பத்தின் பாரம்பரியம் எனவும், ராகுல்காந்தி தெரிவித்தார்.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதில், மோடி தலைமையிலான மத்திய அரசு படுதோல்வி அடைந்துவிட்டதாகவும் ராகுல் குற்றம் சாட்டினார். நாளொன்றுக்கு, சுமார் 30,000 இளைஞர்கள் படித்து முடித்து வேலைக்கு வருவதாகவும், ஆனால் மத்திய அரசால் 450 பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்பு அளிக்க முடிவதாகவும் அவர் கூறினார்.
அதேநேரத்தில், சீனாவில் நாளொன்றுக்கு 50,000 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டு வருவதாகவும் ராகுல் தெரிவித்தார்.