இளைஞர் யுவதிகளுக்கு சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுப்பதை அரசாங்கம் தனது பொறுப்பாகக் கருதுகிறது – பிரதமர்
மீண்டும் நாட்டில் பயங்கரவாதம் ஏற்படுவதற்கு இடமளிக்காத வகையில் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அதே வேளை நாட்டின் இளைஞர் யுவதிகளுக்கு சிறப்பான எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுப்பதை அரசாங்கம் தனது பொறுப்பாகக் கருதுவதாகவும் பிரதமர் கூறினார்.
பிரதமர் காலியில் நெலும் ஹப்பிட்டிய ரிதிதரு இளைஞர்களினால் அமைக்கப்பட்ட பாலத்தை நேற்று காலை பார்வையிட்டார். அங்கு உரையாற்றுகையில் அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.
நாட்டில் மீண்டும் ஜனநாயகம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் கல்வித்துறையில் விரைவாக அபிவிருத்தி ஏற்படுத்தப்படும். தரம் 13 வரையிலான கல்வி கட்டாயமாக்கப்படும். வருமானத்திற்கான வழிவகைகள் செய்யப்பட்டுள்ளதுடன் இளைஞர் யுவதிகளின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்த அரசாங்கம் பல்வேறு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றது. இந்த வேலைத்திட்டங்கள் தென்மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக பிரதமர் தெரிவித்தார்.
இளைஞர்களினால் அமைக்கப்பட்ட இந்த பாலத்தை அமைப்பதற்காக 35 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது. தேசிய இளைஞர் சேவைகள் மன்றும் நாடுதழுவிய ரீதியில் முன்னெடுத்துள்ள 1500 திட்டங்களில் முதலாவது இடத்திற்கு இந்தத் திட்டம் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதுதொடாபாக பிரதமர் தொடர்ந்து தெரிவிக்கையில் :
திட்டத்திற்காக வழங்கப்பட்ட மானியத்திற்கு மேலதிகமாக 5 மடங்கு மானியங்களைப் பயன்படுத்தி வெற்றிகரமாக இந்தத் திட்டத்தை நிறைவு செய்வதற்காக அரச ஒப்பந்தங்கள் இந்த இளைஞர்களக்கு வழங்கப்படுமென்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.
அமைச்சர்களான கயந்த கருணாதிலக, வஜிர அபேவர்தன, சாகல ரத்னாயக்க, இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் எரங்க வெலிஅங்கே ஆகியோரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.