கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி இந்த நல்லாட்சி அரசாங்கம் கொண்டிருந்த இலட்சியங்களில் இருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விலகிவிட்டார் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இருப்பினும் தாம் இன்னும் அந்த இலட்சியங்களுடனேயே செயற்பட்டு வருவதாகவும் அரசியல் அமைப்புக்கு ஏற்ப தேர்தலை நடத்தினால் அதை எதிர்கொள்ள தயாராக இருக்கின்றோம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் ஐக்கிய தேசியக்கட்சியினர் இன்று (வியாழக்கிழமை) முன்னெடுத்துள்ள பாரிய ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் இன்று நாடாளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தை கலைத்துவிட்டதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.
இந்நிலையில் நாம் ஒரு அரசாங்கத்தை அமைக்க அனைத்து கட்சிகளின் ஒப்புதலுடன் தேர்தலுக்கு செல்லலாம் என்றும் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தலை நாம் நடத்துவோம் என்றும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும் எமது மக்கள் பலத்தை வெளிக்காட்ட நாம் நாடாளுமன்ற தேர்தல் அல்ல ஜனாதிபதி தேர்தலையும் எதிர்கொள்ள தயாராகவே இருக்கின்றோம் என்றும் கூறியுள்ளார்.