பிள்ளையானுக்கு தொடர்ந்தும் சிறை
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பான சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனை எதிர்வரும் 20ஆம் திகதிவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொலை வழக்கின் சந்தேகநபர்களான பிள்ளையான், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவ புலனாய்வு உத்தியோகத்தரான எம்.கலீல் ஆகியோர் இன்று (திங்கட்கிழமை) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது நீதவான் எம்.கணேசராஜா இவ் உத்தரவை பிறப்பித்தார்.
கடந்த 2005ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலைச் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட பிள்ளையான் உள்ளிட்ட நால்வரும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட தன்னை விடுவிக்க வேண்டுமென கோரி பிள்ளையான் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, எதிர்வரும் மே மாதம் 30ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




