பிள்ளையான் உள்ளிட்ட நால்வருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான பிள்ளையான் உள்ளிட்ட நால்வரை, எதிர்வரும் மார்ச் மாதம் 6ஆம் திகதிவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது நீதவான் எம்.கணேசராஜா இவ் உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கொலைச் சந்தேகநபர்களான பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன், பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம், இராணுவ புலனாய்வு உத்தியோகத்தரான எம்.கலீல் ஆகியோருக்கே விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் திகதி மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் நத்தார் நள்ளிரவு ஆராதனையில் ஈடுபட்டிருந்தபோது ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் இவர்கள் கைதுசெய்யப்பட்டு சுமார் ஒரு வருடத்திற்கும் மேல் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.