வாக்குறுதியையடுத்து முடிவுக்கு வந்தது பன்னங்கண்டி மக்களின் போராட்டம்!
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பன்னங்கண்டி மக்களின் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் நேற்று 15ஆவது நாள் முடிவுக்கு வந்துள்ளது.
நேற்றுப் பிற்பகல் பன்னங்கண்டியில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்த மக்களை கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், காணி உரிமையாளர்களின் ஒருவரின் மகளான வைத்தியர் மாலதிவரன் மற்றும் காவேரி கலாமன்ற இயக்குநர் அருட்தந்தை கலாநிதி யோசுவா ஆகியோர் சென்று சந்தித்து காணிகளை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்ற உறுதிமொழியை வழங்கினர். இதனயடுத்து 15 நாட்களாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்த மக்கள் தங்களின் போராட்டத்தை நேற்று மதியத்துடன் நிறுத்தியுள்ளனர்.
காணி அனுமதிப் பத்திரம், வீட்டுத்திட்டம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைக் கோரி பன்னங்கண்டி மக்கள் கடந்த 4ஆம் திகதி முதல் தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர். இந்த மக்கள் 1990ஆம் ஆண்டு முதல் குறித்த காணியில் குடியிருந்து வருகின்றனர். இவர்கள் குடியிருக்கும் காணி தனியாருக்குச் சொந்தமானது. இதனால் அரசின் வீட்டுத்திட்டம், மலசல கூடம் உள்ளிட்ட எவ்வித உதவித் திட்டமும் இன்றி மிக மோசமான வாழக்கையை இவர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். இந்தநிலையிலேயே, அவர்கள் தங்களின் பிரச்சினைக்குத் தீர்வுகோரி கவனயீர்ப்பில் ஈடுப்பட்டு வந்தனர்.
பன்னங்கண்டி மக்களின் பிரச்சினை காணி உரிமையாளர்களின் சம்மத்ததுடன் நேற்று முடிவுக்கு வந்துள்ளது. உடனடியாக காணிகள் நில அளவை செய்யப்பட்டு அங்கு 1990ஆம் ஆண்டிலிருந்து வாழ்கின்ற சுமார் 65 குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ளன. அத்தோடு அவர்களுக்கான வீட்டுத்திட்டமும் வழங்கப்படும் என்று கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.
இதனைத் தவிர தங்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கக் காரணமாக இருந்த வைத்தியர் மாலதிவரன், அருட்தந்தை யோசுவா, மாவட்ட அரச அதிபர், பிரதேச செயலாளர் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பதாக பன்னங்கண்டி மக்கள் தெரிவித்துள்ளனர்.

