வலிகாமம் வடக்குப் பகுதியில் கடற்படைத்தளம் அமைப்பதற்கும், சுற்றுலாத்துறை அதிகாரசபைக்குமாக சுகாதாரத் திணைக்களத்தினதும் தனியாரினதும் காணிகளை சுவீகரிக்க அரசு முயல்வதாக அறிகின்றோம். இதுதொடர்பில் நானும் சுமந்திரனும் பிரதமரிடத்தில் தெரிவித்திருந்தோம்.
இன்றும் நான் இது தொடர்பாக பிரதமரிடத்தில் தொலைபேசியில் உரையாடியிருந்தேன். அவர் தடுத்து நிறுத்துவதாக உறுதியளித்திருந்தார். நில ஆக்கிரமிப்பு தொடர்பாக என்னால் தொடரப்பட்ட வழக்கு தற்போதும் உயர் நீதிமன்றத்தில் உள்ளது;. இந்த விடயத்தை சட்ட ரீதியாகவும் நாம் அணுகுவோம். மீறி 22 ஆம் திகதி காணிகளை அளவிட முற்பட்டால் நாம் நிச்சயம் தடுத்து நிறுத்துவோம்
இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமாகிய மாவை சோ.சேனாதிராசா.
காணி சுவீகரிப்புக்கு எதிராக அவர் ஓர் ஊடக அறிக்கையையும் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:
.கீரிமலை, நகுலேஸ்வரம் பிரதேசத்தில் ஜே/226, ஜே/233 கிராம சேவகர் பிரிவில் சிறிலங்கா கடற்படையின் கட்டுப்பாட்டில் 270 ஏக்கர் நிலம் இன்னும் விடுபடாமல் உள்ளது. இந்தப் பிரதேசம் நகுலேஸ்வரம் புனித பூமி பிரதேசத்துடன் தொடர்புபட்டது. 2014 ஆம் ஆண்டில் வடக்கு கடற்படைத் தளத்துக்கென 270 ஏக்கர் நிலம் அரசு கையகப்படுத்த அறிவிக்கப்பட்டது. 2018 இல் 40 ஏக்கர் மீள்குடியேற்றத்திற்கு விடுவிக்கப்பட்டுள்ளது.
தற்போது 228 ஏக்கர் நிலம் கடற்படையின் கட்டுப்பாட்டில் உள்ளது. 2015 இன் பின் 2016 தைத் திங்களிலிருந்து நகுலேஸ்வரம் புனித பூமிப் பிரதேசங்கள் அரசோ, கடற்படையினரோ கையகப்படுத்தக்கூடாது என்று ஜனாதிபதி மற்றும் பிரதமர், படைத்தளபதிகளுடனான கூட்டங்களில் நாம் வலியுறுத்தி வந்துள்ளோம்.
2019 ஆரம்பத்திலிருந்து
(1) ‘யாழ்ப்பாண அபிவிருத்தித் திட்டத்தின் படி வட மாகாணத்தின் சர்வதேச கூட்டிணைப்பு மையம்’ மற்றும் தொடர்புள்ள இடங்கள் ஜே/226, நகுலேஸ்வரம் என்ற பிரதேசத்தில் 62 ஏக்கர் நிலமும் –
(2) காங்கேசன்துறைமுகத்தின் பாதுகாப்பு மையமாக 2 ஏக்கர் நிலமும்
(3)கடற்படைக்கு மேலும் 164 ஏக்கர் நிலமும் கட்டாயமாக ஜே/233 காங்கேசன்துறை மேற்கில் வேண்டும் என்றும் கடற்படையினர் வற்புறுத்தியிருந்தனர்.
நகுலேஸ்வரம் புனித பிரதேசத்தில் நகுலேஸ்வரம் கோவிலை அடுத்து பத்து முக்கிய கோவில்கள், சமாதிகள், புனித
நீரூற்றுக்கள், புனித மடங்கள், பிதிர்க்கடனியற்றும் புனித நீர்நிலை கடற்கரைஎன்பன உள்ளன.. அத்துடன் தனியார் தொழில் துறைகளுக்குரிய
நிலங்களும் கையகப்படுத்த அறிவித்தல் கொடுக்கப்பட்டுள்ளது என ஆவணங்களுடன் வாதிட்டு இப் பிரதேசங்கள் கையகப்படுத்த
முடியாமல் தடுத்து வந்திருக்கிறோம். நகுலேஸ்வரம் புனித பிரதேசமாக எல்லையிடப்பட வேண்டும். சுற்றுலாத்துறை
பிரதேசமாக பிரகடனப்படுத்த அனுமதிக்க முடியாது.
2012 – 2014 காலத்தில் தனியாருக்குச் சொந்தமான மலைப் பிரதேசத்தில் தான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனக்கு
வசதியாக 200 கோடி ரூபா செலவில் மாளிகை கட்டியுள்ளார். இம் மாளிகையுடன் சுற்றுலாத்துறை நிர்வாகம் அயற்பிரதேசங்களையும் நகுலேஸ்வரப் பூமியிலும் சுற்றுலா மையம் அமைக்கத் திட்டமிடப்பட்டு நிலங்கள் கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிமெந்துத் தொழிற்சாலைப் பிரதேசம் : ஜே/233, 2016 தைத்திங்களில் பிரதமர் பலாலிக்கு வந்தபோது சிமெந்துத் தொழிற்சாலை மீண்டும் இயங்குவதால் நிலத்தடி நீர் பாதிக்கப்படும், கடல் நீர் புகுந்து விடும்,சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும், நில இழப்பு ஏற்படும், நில அதிர்வு ஏற்படும் என்பதால் அத் தொழிற்சாலைப் பிரதேசத்தில் தொழிற்பேட்டை, சிறுதொழில்கள், தொழில் நுட்பத்துறை மையங்களை ஏற்படுத்தி வேலைவாய்;ப்பையும் பொருளாதார அபிவிருத்தியும் ஏற்படுத்த வேண்டுமெனப் பிரதமரும் நாமும் திட்டமிட்டடிருந்தோம்.
2018, 2019ஆம் ஆண்டுகளில் இந்தத் திட்டங்கள் தொடர்பான அமைச்சரவைப் பத்திரமும் முன்வைக்கப்பட்டது. 2019ஆம் ஆண்டில் அதற்கான வேலைகளை ஆரம்பிக்க நில எல்லைகள் வரையப்படவும் ஆரம்பிக்கப்பட்டது. சீமெந்து உற்பத்திக்காகச் சுண்ணாம்புப் பாறைகள், அகழ்ந்த கிடங்குப் பிரதேசத்தை நிரப்புவது என்றும் திட்டமிடப்பட்டது.
தற்போது சீமெந்துத் தொழிற்சாலை ஜே/233 பிரிவில் கடற்படை ஆக்கிரமிக்க அல்லது சுவீகரிக்க அரசு இடமளித்தால் தொழில் துறைகள் உருவாக்கவும், வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்தவும், மக்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் வாய்ப்பு ஏற்பட முடியாது.
இந் நிலப்பரப்பை தொழில்துறை மையமாக மாற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் பெற்றுவிடுவோம் எனப் பிரதமர் உறுதியளித்துள்ளார். இப் பிரதேசத்தில் தான் சீமெந்துக் கூட்டுத்தாபன நிலங்களும், காங்கேசன்துறை பெரிய மருத்துவமனை 36 ஏக்கர் நிலங்கள் அத்துடன் தனியார் காணிகளும் உள்ளன.
சீமெந்துக் கூட்டுத்தாபனம்; 163 ஏக்கர் நிலங்களுண்டு. நல்லிணக்கபுரம் நிலம் சீமெந்துக் கூட்டுத்தாபனத்தினால் இன்னும் விடுவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். இப் பிரதேசத்தில் இராணுவத்தளமும் நிறுவத்திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன் அருகாமையில் கிராம சேவகர் பிரிவு ஜே/231 மாவிட்டபுரப் பகுதிகளில் சோழ இளவரசி மாருதப்புரவீகவல்லி கோவில்குளம் குகை என்பன உள்ளன. இக் குகையூடாகவே கீரிமலையில் நகுலமுனிவரிடம் சென்று மாவிட்டபுரம் கோவிற்கடவை முருகன் வேல் உள்ள இடத்திற்கு வந்து பிரார்த்தனை செய்தார் எனும் வரலாற்றுச் செய்தியுமுண்டு.
‘தலசெவன’ விடுதி மையம் ‘சுற்றுலா மையம் ஜே/234 பகுதியில் இதற்காக அப்பகுதியில் தலசெவன விடுதி, சிறுவர் பூங்கா, காங்.ஆங்கிலப் பாடசாலை, உணவு பாதுகாப்புக் களஞ்சியம், சொத்துப் பாதுகாப்பு பிரதேசம் தனியார் காணிகள் மொத்தமாக 30ஏக்கர் நிலங்களை சுற்றுலாப்
பிரதேசமாகப் பிரகடனப்படுத்திக் கையகப்படுத்த நிலம் அளவீடு செய்ய முயற்சிக்கப்படுகிறது. தலசெவன விடுதி இராணுவ
முகாமையிலுள்ளது.
பத்திரிகைகளில் 232 ஏக்கர் நிலம் கடற்படைத்தளம் அமைக்க சுவீகரிக்கப்படவுள்ளது என விவரமான செய்தி வந்துள்ளது. மிக்க
நன்றி. ‘தலசெவன விடுதி’ சுற்றுலாத்துறை மையங்களுக்கு நிலங்கள் அளவீடு செய்ய விடுவிக்கப்பட்ட அமைச்சினதோ
அல்லது ஜனாதிபதி செயலகத்திலிருந்தோ பரிமாறப்பட்ட செய்திகள் இம்மாதம் 10ஆம் திகதி வரையில் தான் எமது
கவனத்திற்கு ஆவணமாகக் கிடைத்தது.
ஜனாதிபதி செயலகக் கூட்டத்தில் இவ்விடயத்தில் .சுமந்திரன்பா.உ ஜனாதிபதியுடன் பேச்சில் ஈடுபட்டிருந்தார்.
பாராளுமன்றத்தில் தலைவர் சம்பந்தன் அவர்களும் நானும் கேப்பாப்பிலவு நில சுவீகரிப்புச் சம்மந்தமாகவும், வலி-வடக்கு நில சுவீகரிப்புச் சம்பந்தமாகவும் 12.03.19 இல் பேசியிருக்கிறோம். எங்கள் தரப்பில் தொடர்புள்ள ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
பிரதமர் இதற்கு முன்னரே காணியமைச்சரிடத்தில் எம் முன்னிலையிலேயே சுவீகரிப்பு நடவடிக்கைகளை நிறுத்தும்படி உத்தரவிட்டுள்ளார். இன்று காலை 18.03.2019இலும் பிரதமரிடம் தொடர்பு கொண்டு நில அளவீடுகளை நிறுத்தும் படி கேட்டுள்ளேன். சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12.03.2019 காணியமைச்சர் கயந்த கருணாதிலக்காவையும் காணியமைச்சு செயலாளரையும் சந்தித்து காணி அளவீடு செய்யும்
நடவடிக்கையை நிறுத்தும்படியும் கடிதமூலம் கேட்டுள்ளேன்.
இப்பொழுது ஜே/226 பகுதியில் நகுலேஸ்வரம் தொடர்புபட்ட நிலங்களையும் சுவீகரிக்க 22.03.2019 அளவீடு செய்ய அறிவிக்கப்பட்டுள்ளது.
22ஆம் திகதிக்கு முன்னர் காணியளவீடு நடவடிக்கைகளை நிறுத்தாது விட்டால் நாம் அதை தடுத்து நிறுத்தப் பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்போம்.
உச்ச நீதிமன்றில் எமது வழக்குகள் இப்பொழுதும் இருக்கின்றன. உச்ச நீதிமன்றத்திலும் ஆட்சேபனை தெரிவித்து சுவீகரிப்பு நடவடிக்கைகளை தடுக்க முயற்சி செய்வோம் என உறுதிப்படுத்துகின்றேன் என்றுள்ளது.