காணாமல் போனோர் அலுவலகத்தை அமைப்பது தொடர்பான சட்டத்தில் திருத்தம்!
காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தை நிறுவுவதில் தொடர்ந்தும் இழுபறி நிலை காணப்படும் நிலையில், குறித்த அலுவலகத்தை அமைப்பது தொடர்பான சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில், அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான கயந்த கருணாதிலக இதனைத் தெரிவித்தார்.
காணாமல் போனோர் தொடர்பான காரியாலயத்தை அமைப்பதற்கான சட்டத்தை நிறைவேற்றுவதற்கு கடந்த 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23ஆம் திகதி நாடாளுமன்றில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த காரியாலயத்திற்கு வழங்கப்பட்டுள்ள பணியினை நிறைவேற்றுவதற்காக யாரேனும் ஒரு நபருடன் அல்லது அமைப்புடன் ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திடும் வகையில் குறித்த காரியாலயத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ள சட்டத்தின் 11ஆம் பிரிவின் (அ) உறுப்புரையினை அகற்றுவதற்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அதனடிப்படையில், அச்சட்டத்தினை திருத்தம் செய்வதற்கான சட்ட வரைபொன்றை மேற்கொள்வதற்காக சட்ட வரைஞர் திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்குவது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
யுத்தம் நிறைவடைந்து 7 வருடங்கள் கடந்துள்ள போதும் காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினைக்கு உரிய தீர்வு எட்டப்படாமல் உள்ள நிலையில், காணாமல் போனோர் குறித்த அலுவலகமொன்றை அமைத்து விசாரணைகளை முன்னெடுப்பதாக ஐ.நா.வுக்கு இலங்கை அரசாங்கம் வாக்குறுதி வழங்கியிருந்தது. குறித்த அலுவலகம் அமைப்பதிலும் பல்வேறு இழுபறிகள் காணப்பட்டு வரும் நிலையில், அரசாங்கம் எவ்வாறு காணாமல் போனோருக்கு உரிய தீர்வை பெற்றுத்தருமென பாதிக்கப்பட்டோர் கேள்வியெழுப்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




