Tuesday , August 26 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / வடக்கு அமைச்சர்கள் மீதான ஊழல், மோசடி: சரியாகவே நடந்தது விசாரணைக் குழு என்கிறார் விக்கி

வடக்கு அமைச்சர்கள் மீதான ஊழல், மோசடி: சரியாகவே நடந்தது விசாரணைக் குழு என்கிறார் விக்கி

“வடக்கு மாகாண சபையின் அமைச்சர்கள் மீதான ஊழல் மற்றும் நிர்வாக முறைகேடுகள் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு சரியாகத்தான் செயற்பட்டது. அமைச்சர்கள், விசாரணைக் குழு முன்பாக தங்களது குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்வதற்கு அவகாசம் வழங்கப்பட்டது. விசாரணைக் குழு உரிய முறையில்தான் செயற்பட்டது.”

– இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சபையில் தெரிவித்தார்.

“பொதுவாகக் குற்றச்சாட்டுகள் எமது உறுப்பினர்களாலேயே முன்வைக்கப்பட்டுள்ளன. உறுப்பினர்கள் நால்வரான அமைச்சர்கள் மீது மற்றைய சில உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டி அவை சம்பந்தமாக சுதந்திரமான விசாரணை நடத்தப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. விதப்புரைகளையும் விசாரணைக்குழுவினர் தந்துள்ளார்கள்” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

“அறிக்கையின் அடிப்படையில் என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது பற்றி நானே தீர்மானிக்கவேண்டும். எனினும், நான் தீர்மானிக்க முன் சபையினரின் கருத்தை அறிய ஆவலாய் இருக்கின்றேன். அத்துடன், அறிக்கையில் இருப்பவை பற்றி சம்பந்தப்பட்டவர்கள் சபையில் விளக்கமளிக்க அவகாசம் அளிக்கவேண்டும்” என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

வடக்கு மாகாண அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் மற்றும் நிர்வாக முறைகேடுகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்வதற்காக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் அறிக்கை, வடக்கு மாகாண சபையின் விசேட அமர்வில் முதலமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்டது. விசாரணை அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான உரையை ஆற்றியபோதே முதலமைச்சர் மேற்படி விடயங்களைத் தெரிவித்தார்.

அவர் தனது உரையில் மேலும் கூறியதாவது:-

“பலவிதமான குற்றச்சாட்டுகள் எமது அமைச்சர்களுக்கு எதிராகக் கிடைத்ததன் விளைவாக நாம் ஒரு விசாரணைக் குழுவை அமைத்தோம். அதில் இருவர் ஓய்வுபெற்ற மேல்நீதிமன்ற நீதிபதிகள்; ஒருவர் இளைப்பாறிய இலங்கை நிர்வாக சேவையின் ஒரு சிரேஷ்ட அதிகாரியாவார். விதிமுறைக் குறிப்புகள் கொடுக்கப்பட்டு அவற்றின் அடிப்படையில் மூடிய அறையில் விசாரணைகள் நடைபெற்றன.

ஊடகங்களுக்குத் தகவல்கள் வழங்கப்படாது என்ற நிபந்தனையின்பேரில் விசாரணைகள் நடைபெற்றன. தற்போது அவர்களின் அறிக்கை பெறப்பட்டுள்ளது.

மீன்பிடி, போக்குவரத்து, வர்த்தக, வாணிபம், கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி மற்றும் மோட்டார் போக்குவரத்து அமைச்சருக்கு எதிராக 4 குற்றச்சாட்டுகளும், சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சருக்கு எதிராக 5 குற்றச்சாட்டுகளும் கல்விப் பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சருக்கு எதிராக 9 குற்றச்சாட்டுகளும், விவசாய கமநலசேவை, கால்நடை அபிவிருத்தி, நீர் வழங்கல், உணவு வழங்கல் விநியோகித்தல், சுற்றாடல் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சருக்கு எதிராக 10 குற்றச்சாட்டுகளும் கிடைக்கப்பெற்றன.

நான்கு அமைச்சர்களும் குழுவின் அதிகாரத்தை ஏற்று சாட்சியமளித்துள்ளார்கள். சாட்சியமளிக்க அவர்கள் பின்நிற்கவில்லை. குறித்த குற்றச்சாட்டுகள் சம்பந்தமான அறிக்கையை இந்தச் சபை முன் சமர்ப்பிக்க முன்னர் சில விடயங்களைப் பகிர்ந்துகொள்வது நன்மைபயக்கும் என்று நம்புகின்றேன்.

விசாரணைக்குழு அங்கத்தவர்கள் வடக்கு மாகாண சபையின் நடவடிக்கைகள் பற்றியும், 13ஆவது திருத்தச்சட்டத்தின்கீழ் அவர்கள் கருத்துப்படி எமக்கிருக்கும் மிகக் குறுகிய அதிகாரங்கள் பற்றியும், ஆளுநரின் அதிகாரங்கள் பற்றியும் பல்வேறு கருத்துகளைத் தமது அறிக்கையில் முன்வைத்துள்ளார்கள். அவை எம்மால் பரிசீலிக்கப்படவேண்டியவை.

முறைப்பாட்டாளர்கள் வராததால் சில அமைச்சர்கள் பேரிலான குற்றச்சாட்டுகள் சம்பந்தமாக சாட்சியம் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார்கள். மற்றையவர்கள் சம்பந்தமான தவறுகள் பல எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.

உதாரணத்துக்கு அதிகாரத் துஷ்பிரயோகம் பற்றிக் கூறியுள்ளார்கள். பணவிரயம் பற்றிக் கூறியுள்ளார்கள். அதிகார வரம்பை மீறியுள்ளதாகக் கூறியுள்ளார்கள். மேலும், பல தவறுகள் பற்றிக் கூறியுள்ளார்கள்.

பொதுவாகக் குற்றச்சாட்டுகள் எமது உறுப்பினர்களாலேயே முன்வைக்கப்பட்டுள்ளன. உறுப்பினர்கள் நால்வரான அமைச்சர்கள் மீது மற்றைய சில உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டி அவை சம்பந்தமாக சுதந்திரமான விசாரணை நடத்தப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. விதப்புரைகளையும் விசாரணைக்குழுவினர் தந்துள்ளார்கள்.

அறிக்கையின் அடிப்படையில் என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது பற்றி நானே தீர்மானிக்கவேண்டும். எனினும், நான் தீர்மானிக்க முன் சபையினரின் கருத்தை அறிய ஆவலாய் இருக்கின்றேன். அத்துடன், அறிக்கையில் இருப்பவை பற்றி சம்பந்தப்பட்டவர்கள் சபையில் விளக்கமளிக்க அவகாசம் அளிக்கவேண்டும் என்றும் அபிப்பிராயப்படுகின்றேன். ஏனென்றால், சில விடயங்கள் விசாரணைக்குழுவினால் கவனத்துக்கு எடுக்கப்படவில்லை என்றும், தவறான முடிவுக்கு அவர்கள் வந்துவிட்டார்கள் என்றும் பாதிக்கப்பட்டவர்களால் கருத்துகள் வெளியிடப்பட்டுள்ளன.

நாங்கள் ஈடுபட்டுள்ள இந்தச் செயல்முறை பொதுவாழ்வில் உள்ளவர்கள் வெளிப்படைத்தன்மைக்கும் பொறுப்புக்கூறலுக்கும் தம்மை முன்னிறுத்த முன்வரவேண்டும் என்ற கருத்தை முன்னிலைப்படுத்துவதாக அமைந்துள்ளது.

மக்கள் எம்மைத் தேர்ந்தெடுக்கும்போது எங்கள் மீது அவர்களுக்குப் பல எதிர்பார்ப்புகள் இருந்தன. நேர்மையான, ஊழலற்ற, பக்கச்சார்பற்ற, கண்ணியமான ஒரு நிர்வாகத்தை நாம் அவர்களுக்குக் கொடுப்போம் என்ற எதிர்பார்ப்பே அது.

புதிய ஓர் அமைப்பான வடக்கு மாகாண சபையைக் கையேற்றபோது நாம் ஒரு நம்பிக்கைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டோம். ஆகவே, நம்பிக்கைப் பொறுப்பாளர்கள் என்ற முறையில் நேர்மை, பக்கச்சார்பற்ற தன்மை, பொறுப்புக்கூறல், பொறுப்பாக நடந்துகொள்ளல் மற்றும் மக்களின் நலன்களைப் பாதுகாப்பது போன்ற குணாதிசயங்களை மக்கள் எங்களிடம் எதிர்பார்த்துள்ளார்கள்.

அந்த நம்பிக்கையை நாங்கள் மழுங்கடிக்கும் வண்ணம் நடந்துகொள்ளக்கூடாது என்ற கருத்தை வலியுறுத்தவே மேற்படி விசாரணைக் குழு நியமிக்கப்பட்டது. எம்மிடம் குறைபாடுகள் இருப்பின் அவற்றை நிவர்த்திசெய்யவே இந்த விசாரணைக் குழு நியமிக்கப்பட்டது.

எம்மை நாமே ஒழுக்கப்படுத்த அல்லது எமது நடவடிக்கைகளை மீளாய்வுசெய்ய இந்த வழிமுறை உதவியது.

மத்திய அரசும் வெளிப்படைத்தன்மையையும் பொறுப்புக்கூறலையும் தமது நிர்வாகத்தில் உள்ளடக்குவதாகவே கூறி பதவிக்கு வந்தது. அந்தவகையில் எங்கள் வடக்கு மாகாணம் வேறெந்த குறைகள் இருப்பினும் அடிப்படை விடயங்களில் சறுக்கிவிடக்கூடாது.

அதிகாரத் துஷ்பிரயோகம், பணவிரயம், அதிகார வரம்பு மீறல், பக்கச்சார்பான நடவடிக்கைகள் போன்றவை எமது நிர்வாகத்தைக் கேள்விக்குறியாக்கிவிடுவன. நாம் எமது குறைபாடுகளைச் சீர்செய்யவேண்டும். ஆனால், அதேநேரம் விசாரணைக்குழுவின் அறிக்கையில் முன்கூறியவாறு பல குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. உதாரணத்துக்கு நான் வருகை தராத ஒரு கூட்டத்துக்கு நான் சென்றிருந்தேன் என்று கூறப்பட்டுள்ளது.

இவ்வாறான பல விடயங்கள் சம்பந்தமாக எமது அமைச்சர்கள் கேள்விகளை எழுப்பவோ விளக்கமளிக்கவோ நாம் இடமளிக்க வேண்டும். எந்த விடயத்திலும் மேன்முறையீடு செய்ய வசதியளிக்கப்படும். அதையொட்டியே இந்தக் கோரிக்கையை விடுக்கின்றேன்.

அத்துடன், முறைப்பாட்டாளர்கள் வருகை தராததால் கைவிடப்பட்ட விசாரணைகளை மீண்டும் உயிர்கொடுக்கவேண்டுமென்றால் அதனைச் செய்யவும் நாங்கள் தவறக்கூடாது. சபையின் கௌரவத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு உங்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது.

எந்தவொரு விவாதமும் தனிப்பட்ட ரீதியாக எவரையும் தாக்குவதாக அமையக்கூடாது. ஒரு விடயம் நடந்ததா, இல்லையா என்பதை அறிவதே எமது குறிக்கோளாக இருக்கவேண்டும்.

தனிப்பட்டமுறையில் எவரையும் தாக்குவதையும் அவர்களின் மனதைப் புண்படுத்துவதையும் தவிர்த்துக்கொள்ளவேண்டும். இனியாவது தனிப்பட்ட முறையில் உறுப்பினர்களைத் தாக்குவதைத் தவிர்ப்போமாக!

உங்கள் அனைவரிலும் உள்ள நம்பிக்கையின் அடிப்படையில் அறிக்கையின் பிரதியை சபைக்குக் கையளிக்கின்றேன். இந்த அறிக்கை அந்தரங்கமானது. ஊரைக் கூட்டி உங்கள் உரைகளை ஊரறிய ஊடகங்களுக்குக் கையளிப்பது எமது வடக்கு மாகாண சபைக்கே இழுக்கை ஏற்படுத்தும்.

“குற்றமற்றவர்களே மேரி மக்டெலின் மீது முதற்கல் எறிய முன்வாருங்கள்” என்றார் இயேசு கிறிஸ்துநாதர். குற்றஞ்சாட்டுவதால் அரசியல் இலாபம் பெற விழைவோர் தமது நடவடிக்கைகளை மீள்பரிசீலனைக்கு உட்படுத்த முன்வரவேண்டும். நடைமுறைப்படுத்தப்படும் செயற்பாடுகள் எம் ஒவ்வொருவரையும் உள்ளடக்கியது என்பதை மறவாது இருப்போமாக!

இது சம்பந்தமான விவாதத்தை இம்மாதம் 9ஆம் திகதி வைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். இவ்வாறான விடயங்களை நீடிப்பதால் அலுவலகங்களில் வேலைகள் தடைப்பட்டுப்போய்விடும். ஆகவேதான், 9ஆம் திகதி விவாதத்திற்கு நியமிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

பாதிக்கப்பட்ட அமைச்சர்கள் அறிக்கை பற்றிய தமது விளக்கங்களை உடனேயே எழுத்துமூலம் தரவேண்டும். சபையினர் அனைவருக்கும் அறிக்கையும் அந்த விளக்கங்களும் தாமதமில்லாது கையளிக்கப்படவேண்டும் என்று கேட்டு அறிக்கையின் பிரதியொன்றினை அவைத் தலைவருக்குக் கையளித்து என் பேச்சை முடித்துக்கொள்கின்றேன்” – என்றார்.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …