Sunday , June 22 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / 2025 வரை நல்லாட்சி அரசின் பயணத்தை எவராலும் நிறுத்தவே முடியாது! – அடித்துக் கூறுகின்றார் ராஜித

2025 வரை நல்லாட்சி அரசின் பயணத்தை எவராலும் நிறுத்தவே முடியாது! – அடித்துக் கூறுகின்றார் ராஜித

“நல்லாட்சி அரசு அதன் கோட்பாடுகளை முன்னோக்கிக் கொண்டுசெல்வதில் உறுதிபூண்டுள்ளது. எவரும் அச்சம்கொள்ளத் தேவையில்லை.”

– இவ்வாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

அத்துடன், இரண்டு பிரதான தேசியக் கட்சிகளும் இணைந்து அமைத்துக்கொண்ட தேசிய அரசு (நல்லாட்சி அரசு) 2020ஆம் ஆண்டுவரை தொடரும் எனவும், 2020ஆம் ஆண்டு தேர்தலின் பின்னர் 2025ஆம் ஆண்டுவரை ஒப்பந்தம் புதுப்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

ஜப்பானிய வேலைத்திட்டத்தின்கீழ் கல்கமுவயில் அமைக்கப்படும் வைத்தியசாலையின் பணிகளை ஆரம்பித்துவைக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நல்லாட்சி அரசு மனிதநேய கொள்கையின்படி மக்களுக்கான சலுகைகளை வழங்கும். ஏழைகளுக்கு இலவசமாக மின்சாரத்தை வழங்கியது. நல்லாட்சி அரசால் நாட்டுக்கு செய்யப்படும் சேவையை ரூபாக்களால் அளவிடமுடியாது. மனிதநேயத்தின் அடிப்படையில்தான் அளவிடமுடியும்.

சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் மக்களுக்குப் பெற்றுக்கொடுக்கும் பாரிய பணியை நல்லாட்சி அரசு முன்னெடுத்துவருகின்றது. மாற்றத்தை ஏற்படுத்தும்போது பல்வேறு வகையான குற்றச்சாட்டுகளை எம்மீது சுமத்துகின்றனர். இது பண்டாரநாயக்க காலம்முதல் தொடர்கின்றது. அபிவிருத்தியை ஏற்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும்.

உயர்கல்வி மற்றும் சுகாதாரத்தை தனியார்மயப்படுத்துவதாக சிலர் கூறுகின்றனர். உயர்கல்வியையும், சுகாதாரத்தையும் அபிவிருத்திசெய்ய ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவே பாரிய சேவையைச் செய்துள்ளார். புகையிலையைக் கட்டுப்படுத்த நல்லாட்சி அரசு எடுத்த முயற்சி வெற்றியளித்துள்ளது. அதனை ஜனாதிபதியே தீர்மானித்திருந்தார்.

நல்லாட்சி அரசை முன்னோக்கிக் கொண்டுசெல்வதற்கு எதிராக பல தடைகள் ஏற்படுகின்றன. ஆனால், அரசு தனது பயணத்தை நிறுத்தாது. 2020ஆம் ஆண்டுவரை தேசிய அரசு நல்லாட்சி அரசு தொடரும் என்பதுடன், அதன்பின் புதிய ஒப்பந்தத்துடன், 2025ஆம் ஆண்டுவரையும் இந்த அரசு தொடரும்” – என்றார்.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …