ருமேனியாவில் ஊழல் தடுப்பு தொடர்பாக புதிய சட்டம் – பல லட்சம் பேர் போராட்டம்
ருமேனியாவில் ஊழல் தடுப்பு தொடர்பாக புதிய சட்டம் கொண்டுவந்த சோசலிஸ்டு அரசுக்கு எதிராக பல லட்சம் பேர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
ஐரோப்பிய நாடான ருமேனியாவில் சோசலிஸ்டு ஜனநாயக கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. இதன் அதிபராக சோரிங் கிரிண்டேன் இருந்து வருகிறார். இந்த நாட்டில் நடந்த பல்வேறு ஊழல் தொடர்பாக அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் சோசலிஸ்டு ஜனநாயக கட்சியை சேர்ந்த தலைவர் லிவின் டிராக்னா என்பவர் மீதும் ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ருமேனிய அரசு ஊழல் தொடர்பாக புதிய சட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளது. அதில், 44 ஆயிரம் யூரோ பணத்துக்கு அதிகமாக ஊழல் செய்தால் மட்டுமே அவர்களை ஜெயிலில் அடைக்கும் வகையில் சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
அதாவது சோசலிஸ்டு ஜனநாயக கட்சி தலைவர் லிவின் டிராக்னா 24 ஆயிரம் யூரோ பணம் அளவுக்கு ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறது. அவரை காப்பாற்றும் நோக்கத்துடன்தான் இந்த புதிய சட்டத்தை கொண்டு வந்திருப்பதாக மக்கள் கருதுகின்றனர்.
இந்த சட்டத்தால் பல அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் ஜெயில் தண்டனையில் இருந்து தப்பும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் இதை எதிர்த்து போராட்டத்தில் குதித்துள்ளனர்.
தலைநகரம் புஜாரஸ்டில் 1½ லட்சத்துக்கும் மேற்பட்டோர் தெருக்களில் திரண்டு போராட்டம் நடத்தினார்கள். அவர்கள் போலீசார் மீது பட்டாசு மற்றும் புகை குண்டுகளை வீசினார்கள். பதிலுக்கு போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதுடன் தடியடியும் நடத்தினார்கள்.
இதை தொடர்ந்து பல இடங்களில் வன்முறை வெடித்துள்ளது. நாட்டின் பல நகரங்களிலும் மக்கள் தெருக்களில் இறங்கி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.