விசாரணைக்கு இந்தியா ஒத்துழைக்க மறுப்பதாக ஸ்ரீலங்கா குற்றச்சாட்டு
இந்திய மீனவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட விடயம் தொடர்பில் ஸ்ரீலங்கா கடற்படை முழுமையான அறிக்கை தயாரிப்பதற்கு இந்திய அரசு சார்பிலான ஒத்துழைப்புகள் தாமதிக்கப்படுவதாக கடற்படைப்பேச்சாளர் கமாண்டர் சமிந்த வலாக்குழுகே குற்றம் சாட்டியுள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவதினத்தன்று இந்திய மீனவர்கள் பயன்படுத்திய ஜீ.பி.எஸ்.உள்ளிட்ட தொழில்நுட்ப தகவல்களை ஸ்ரீலங்கா கடற்படைக்கு பெற்றுத்தருமாறு இந்தியாவிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.
எனினும் இந்தியா இதுவரை அத்தகவல்களை வழங்காமையினால் விரிவான விசாரணையை முன்னெடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் கடற்படைப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும் இந்தியாவின் தொழில்நுட்ப தகவல்கள் கிடைக்கும்வரை காத்திராமல் ஸ்ரீலங்கா கடற்படையினால் நிறைவேற்றப்பட்ட விசாரணை அறிக்கையை இவ்வாரத்திற்குள் கடற்படைத் தளபதியிடம் கையளிக்கவிருப்பதாகவும் பேச்சாளர் கூறினார்.
கடந்த 07 ஆம் திகதி இந்திய மினவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருந்தது. இதல் 22 வயதான மீனவ இளைஞன் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்திருந்தார். இந்த சம்பவத்தில் இந்திய மீனவர் ஒருவர் காயங்களுக்கு உள்ளாகியிருந்தார். இதனையடுத்து தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அத்துடன் இச்சம்பவத்தை ஸ்ரீலங்கா கடற்படையே முன்னெடுத்திருந்ததாகவும் இதற்காக ஸ்ரீலங்கா அரசாங்கம் கவலை தெரிவிக்க வேண்டும் என்றும் இந்திய மத்திய அரசாங்கம் அறிவித்திருந்தது.
இந்தியாவின் குற்றச்சாட்டை ஸ்ரீலங்கா அரசாங்கம் முழுமையான முற்றாக நிராகரித்திருந்த அதேவேளை, ஸ்ரீலங்கா மீன்பிடியமைச்சர் மஹிந்த அமரவீர இச்சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்துமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.
அதற்கமைய விசேட குழுவினர் விசாரணைகளை ஆரம்பித்திருந்ததுடன் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை கடற்படைத் தளபதயிடம் கையளிக்கப்படும் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையிலேயே விசாரணைகளுக்கு இந்தியா ஒத்துழைப்பை வழங்க தாமதித்து வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.