நாட்டின் தேசிய அபிவிருத்தி இலக்குகளை எட்டுவதற்கு மாகாண சபைகளின் செயற்பாடுகள் முறைப்படியாக இருக்க வேண்டியதுடன் மத்திய அரசுக்கும் மாகாண சபைகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பும் சீர்செய்யப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
ஹபரண சினமன் லொஜ் விருந்தகத்தில் நேற்று நடைபெற்ற 33 ஆவது முதலமைச்சர்கள் மாநாட்டில் உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
“ஒன்பது மாகாண சபைகளும் ஒன்பது விதமாக செயற்படுவதனால் நாட்டின் பொது அபிவிருத்தி இலக்குகளை அடைவதில் பெரும் சிக்கல் நிலவுகின்றது. பொதுவான உடன்பாட்டுடன் இந்த மாகாண சபைகள் இயங்கவேண்டும்.
வினைத்திறனான மக்கள் சேவையை வழங்க முடியாமல் இருப்பதனால் மக்கள் மிகுந்த அழுத்தத்துக்கு உள்ளாகின்றனர். பொறுப்புகளை நிறைவேற்றுவது அனைவரினதும் கடப்பாடாகும்.
அரசமைப்பு, சட்டம் மற்றும் அதிகாரம் எப்படியிருந்தாலும் அவற்றை அமுல்படுத்துவோரின் நடத்தைப் பாங்குக்கமையவே செயற்திறன் இருக்கும். அதிகாரத்தைப் பயன்படுத்துவதில் நாம் எவ்வளவு தூரம் முன்னேறியுள்ளோம் என்பதை தெளிவுபடுத்தக்கூடிய அண்மைக்கால உதாரணமாக மீத்தொட்டமுல்ல குப்பைமேட்டு அனர்த்தத்தைக் குறிப்பிடலாம்” – என்றார்.
இந்நிகழ்வில் வடமத்திய மாகாண முதலமைச்சர் பேஷல ஜயரத்ன, ஜனாதிபதிக்கு நினைவுப் பரிசொன்றை வழங்கினார்.
34ஆவது மாநாடு நடைபெறவுள்ள வடமேல் மாகாணத்துக்கு முதலமைச்சர்கள் மாநாட்டின் தலைமைத்துவம் வழங்கப்பட்டது. தற்போது தலைமை வகிக்கும் வடமத்திய மாகாண முதலமைச்சர் பேஷல ஜயரத்ன ஜனாதிபதியின் முன்னிலையில் வடமேல் மாகாண முதலமைச்சர் தர்மசிறி தசநாயக்கவிடம் தலைமைத்துவத்தை ஒப்படைத்தார்.
மாகாண சபைகளின் முதலமைச்சர்கள், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் விவசாய அமைச்சருமான துமிந்த திஸாநாயக்கா, வடமத்திய மாகாண ஆளுநர் பீ.பி.திசாநாயக்கா, பிரதம செயலாளர்கள் உள்ளிட்ட அரச அலுவலர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.