Tuesday , August 26 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / நல்லூர் சம்பவம் தொடர்பில் அரசு விழிப்பாகவே இருக்க வேண்டும்! – மஹிந்த கூறுகின்றார் 

நல்லூர் சம்பவம் தொடர்பில் அரசு விழிப்பாகவே இருக்க வேண்டும்! – மஹிந்த கூறுகின்றார் 

யாழ்.நல்லூரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் அரசு ஆழகாக சிந்தித்துச்செயற்படவேண்டும் எனக் கூறியுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, விடுதலைப்புலிகள் அமைப்பு உருவாகும் காலப்பகுதியில் இவ்வாறான சம்பவங்களே வடக்கில் இடம்பெற்றன எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அம்பாந்தோட்டை, வீரகெட்டிய பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர், நல்லூர் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் குறித்து ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:-

“யாழ்ப்பாணத்தில் பொலிஸ்அதிகாரிகள் இருவர் மீது நடத்தப்பட்டுள்ள துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளார். மற்றையவர் படுகாயமடைந்துள்ளார். 15 வருடங்களுக்கு மேலாக தமிழ் நீதிபதியொருவருக்கு பாதுகாப்பு வழங்கி வந்த அதிகாரியே மரணமானவர்.

மேற்படி சம்பவம் தொடர்பில் அவருடன் (நீதிபதியுடன்) பேசி விடயங்களை அறிந்தேன். தன்னை இலக்குவைத்துப் பாய்ந்த துப்பாக்கித்தோட்டாவையே குறித்த அதிகாரி தனது மார்பில் தாங்கி தனதுயிர் காத்தார் என அவர் கூறினார். இது வீரச்செயலாகும். அந்த அதிகாரிக்கு சன்மானம் வழங்கப்படவேண்டும்.

எனினும், பொலிஸார் வேறு கோணத்தில் கதை கூறுகின்றனர். நீதிபதியும், சம்பவத்தில் காயமடைந்த பொலிஸாரும் ஒரு விதத்திலும், பொலிஸார் மற்றுமொரு கோணத்திலுமே கருத்து வெளியிட்டுள்ளனர். எது எப்படியோ நீதிபதி சொல்வதை நாம் ஏற்கவேண்டும். ஆகவே, இது பற்றி உடனடியாக விசாரணை நடத்தப்படவேண்டும்.

பொலிஸார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி கொலைசெய்யும் அளவுக்கு நாட்டின் சட்டமும், ஆட்சியும் பலவீனமடைந்துள்ளது. இது பாரதூரமான விடயமாகும்.

இவ்வானதொரு சம்பவம் அண்மையில் கொழும்பிலும் நடைபெற்றது. இதில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் பலியாகினர். சிறைச்சாலை அதிகாரிகளும் பலியாகினர்.

தற்போது யாழில் இடம்பெற்றுள்ளது. எனினும், யாழ்பாணத்தில் இப்படியான சம்பவம் இடம்பெறும்போது சற்று விழிப்பாக இருக்கவேண்டும்.

கொழும்பில் நடைபெற்றால் பாதாள உலகக் குழுவினர் செய்திருக்கலாம் எனக் கூற முடியும். ஆனால், அதற்கும் மேலான சம்பவங்களே யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வருகின்றன.

விடுதலைப்புலிகள் உருவாகும் காலப்பகுதியில் இவ்வாறான சம்பவங்களே இடம்பெற்றன. எனவே, இது பற்றி அரசு ஆழமாக சிந்தித்து செயற்படவேண்டும்” – என்றார்.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …