வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மீண்டும் போராட்டத்தில்
வவுனியாவில்காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் முன்னெக்கும் போராட்டத்தை பொய் வாக்குறுதிகளை வழங்கி ஏமாற்றலாம் என அரசியல்வாதிகள் எண்ணக்கூடாது என உணவுதவிர்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
எதிர்க்கட்சி தலைவர், பிரதமர், ஜனாதிபதி ஆகியோர் நேரில் வந்து முடிவு தெரிவிக்கும் வரையில் போராட்டம் தொடரும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மூன்று அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இன்று முதல் உணவுதவிர்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக ஏ9 வீதியின் ஓரமாக தமது உணவுதவிர்ப்பு போராட்டத்தை அவர்கள் ஆரம்பித்துள்ளனர்.
தாயகப் பிரதேசத்தில் கையளிக்கப்பட்டும் கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டோரை தேடியறியும் சங்கம் உணவுதவிர்ப்பு போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.
உணவுதவிர்ப்பு போராட்டமானது காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக தீர்க்கமான முடிவை தெரிவிக்க வேண்டும், அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும், பங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும் என்ற மூன்று கோரிக்கைகளை முன்வைத்து இந்த உணவுதவிர்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வவுனியா கந்தசாமி கோவிலில் பூஜை வழிபாடுகளை அடுத்து நகர் வீதி வழியாக ஊர்வலமாக வருகை தந்து வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக இந்த உணவுதவிர்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சுமார் 10 பேருடன் பொது அமைப்புகளின் பிரதிநிதிக் சிலரும் இணைந்து இவ் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த மாதம் 23 ஆம் திகதி சாகும் வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட இவர்கள் பாதுகாப்பு அமைச்சர் வழங்கிய உறுதிமொழியின் பிரகாரம் 9 ஆம் திகதி அலரி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பில் எவ்வித பலனும் கிடைக்கவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.




