பாகிஸ்தானில் காணாமல் போன இஸ்லாமிய மதகுருக்கள் இருவரும் கண்டுபிடிக்கப்பட்டனர்!
பாகிஸ்தானில் காணாமல் போன இந்தியாவைச் சேரந்த இஸ்லாமிய மதகுருக்கள் இருவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவர்கள் நாளை டெல்லி திரும்புவார்கள் என்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
டெல்லி ஹசரத் நிசாமுதீன் அவுலியா தர்காவின் தலைமைக் குரு சையது ஆசிப் நிசாமி மற்றும் அவரது உறவினர் நசீம் அலி நிசாமி ஆகிய இருவரும் பாகிஸ்தானின் லாகூரில் உள்ள தர்க்காவுக்குச் சென்றபோது காணாமல் போயினர். இதுகுறித்து வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்குத் தெரியவந்ததும் அவர், இருவரையும் தேடிக் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு, பாகிஸ்தான் பிரதமரின் ஆலோசகரான சர்தாஜ் அசீசிடம் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில் இருவரும் கராச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுஷ்மா சுவராஜுக்குப் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் பதில் தெரிவித்துள்ளது. சையது நசீம் நிசாமியுடன் தான் தொலைபேசியில் பேசியதாகவும், அவர்கள் இருவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும், நாளை டெல்லி திரும்ப உள்ளதாகவும் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

