பழைய முறையிலேயே தேர்தல் நடத்தப்பட வேண்டும்: மனோ கணேசன்
புதிய தேர்தல் முறையின் கீழ் சிறுபான்மை மக்களின் அரசியல் பிரவேசம் பாதிக்கப்படுகின்றதென தெரிவித்துள்ள அமைச்சர் மனோ கணேசன், பழைய முறையிலேயே தேர்தல் நடத்தப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை மீள் நிர்ணயம் தொடர்பான அறிக்கை கடந்த வாரம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டிருந்த நிலையில், சிறுபான்மை கட்சிகள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இதுகுறித்து நேற்று (திங்கட்கிழமை) பேச்சுவார்த்தை நடத்தின. இச் சந்திப்பின்போது பிரதமரிடம் இவ்விடயத்தை முன்வைத்ததாக அமைச்சர் மனோ கூறியுள்ளார்.
அத்தோடு, நாடாளுமன்றம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் ஆகியவற்றிற்கு ஒரே தேர்தல் முறையின் கீழேயே தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்ற யோசனையையும் சிறுபான்மை கட்சிகள் முன்வைத்ததாகவும் தமது யோசனைகளை பிரதமர் ஏற்றுக்கொண்டதாகவும் மனோ கணேசன் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் சிறுபான்மை கட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படுமாயின், குறித்த யோசனையை நாடாளுமன்றில் முன்வைத்து தேவையான திருத்தங்களை மேற்கொள்ள முடியுமென உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




