லிந்துலை மெராயாவில் மினி சூறாவளி 33 வீடுகள் சேதம் 150 பேர் பாதிப்பு
லிந்துலை மெராயா பகுதியில் நேற்று மாலை 3.35 மணியளவில் ஏற்பட்ட மினி சூறாவளியால் 33 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் சுமார் 150இற்கும் மேற்பட்டோர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
நேற்று மாலை திடீரெ இவ்வாறு சூறாவளி ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சியடைந்தமை மாத்திரமின்றி பாதுகாப்பாக இடத்தை நோக்கி அல்லோல கல்லோலப்பட்டு ஓடியிருந்தனர்.
பாதிப்படைந்த வீடுகளில் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வீடு உள்ளடங்குவதா லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சூறாவளி ஓல்ட்ரிம் தோட்டத்துக்குச் சொந்தமான கௌலினா பிரிவும் மற்றும் என்போல்ட் தோட்டப்பகுதியிலும் ஏற்பட்டுள்ளது. இதில் கௌலினா தோட்டத்தில் 25 வீடுகளும், என்போல்ட் பகுதியில் 8 வீடுகளும் ஒரு கிறிஸ்தவ தேவாலயமும் சேதமடைந்துள்ளன.
மின்கம்பங்கள் மற்றும் பாரிய மரங்கள் முறிந்து வீழ்ந்ததன் காரணமாக இப்பிரதேசத்தில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட 33 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 150இற்கும் மேற்பட்டோர்களுக்கு நிவாரணங்களை வழங்க பிரதேச செயலகம், தோட்டநிர்வாகம், மற்றும் பொதுமக்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




