தான் கூறிய விடயங்களை செயற்படுத்தியிருந்தால் பல உயிர்களை காவுகொண்ட மீதொட்டமுல்ல அனர்த்தம் அரங்கேறியிருக்காது என உள்ளூராட்சி மன்றம் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
கண்டி கொஹகொட குப்பை மேடும் சரியும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில், இப்பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்காக அங்கு சென்றிருந்த வேளையிலே அமைச்சர் பைசர் முஸ்தபா மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
”மீதொட்டமுல்லையை போன்று அனர்த்தம் ஒன்று கொஹகொட குப்பை மேட்டிலும் ஏற்படுமென தகவல்கள் வெளியாகியிருந்தன எனினும் அவ்வாறான அனர்த்தங்கள் எதுவும் நடைபெறாது என்பதை பொறுப்புடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.
மீதொட்டமுல்ல குப்பை மேடு தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாம் அறிவுறுத்தியிருந்தோம், ட்ரோன் கெமராவை பயன்படுத்தி குப்பையை முகாமைப்படுத்துவது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு பல தடவைகள் மாநகர சபையை கூட்டி கலந்துரையாடல்களை மேற்கொண்டு வலியுறுத்தியிருந்தேன். எனினும் எவரும் அது தொடர்பில் சிந்திக்கவில்லை. அதனாலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றிருந்தது” என கூறினார்.