மீதொட்டமுல்ல அனர்த்தத்தில் உயிரிழந்த மற்றும் பாதிப்புக்களை எதிர்கொண்டிருக்கும் மக்களுக்கு நட்டஈடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கமைய அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபா வரை நட்டஈடாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு இன்றைய தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று இந்த விபத்தில் சொத்துக்களை இழந்தவர்களுக்கு அதிகபட்சமாக 25 இலட்சம் ரூபா வரை நட்டஈடாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு – மீதொட்டமுல்ல குப்பை மேடு கடந்த 14ஆம் திகதி மாலை குடியிருப்புகள் மீது சரிந்து இடம்பெற்ற அனர்த்தத்தில் இதுவரை 30 பேர் பலியாகியிருப்பதோடு, 28 பேர் வரை காணாமல் போயுள்ளனர்.
980 பேர் வரை இந்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 79 வீடுகள் முற்றாகவும், 17 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
இந்த அனர்த்தம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் வார இறுதியில் விசேட பேச்சு இடம்பெற்றதோடு அதில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நட்டஈடு வழங்குவது குறித்து எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய நிதியமைச்சு இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.
இதேவேளை மீதொட்டமுல்ல அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்கைள வழங்குவதற்காக திரைசேறியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த அனர்த்தத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு அவர்களது விருப்பத்திற்கு அமைய கொழும்பு நகரில் மாடி குடியிருப்புத் தொகுதி திட்டத்தில் வீடுகளை அமைத்துக் கொடுக்கும் யோசனையை மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க, ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின்போது முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.