மன்னார் – முள்ளிக்குளம் கிராமத்தை விடுவிப்பது தொடர்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்துரையாடுவதாக வடமாகாண ஆளுநர் ரெஐினோல்ட குரே மன்னார் ஆயர் இல்ல பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளார்.
எனினும் ஆளுநருடனான சந்திப்பு திருப்திகரமாக இருந்ததாக மன்னார் ஆயர் இல்ல பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
மன்னார் – முள்ளிக்குளம் கிராமத்தை விடுவிப்பது தொடர்பாக மன்னார் ஆயர் இல்ல பிரதிநிதிளுக்கும் வடமாகாண ஆளுநருக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.
இந்த சந்திப்பு யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றது,
ஸ்ரீலங்கா கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள தமது கிராமத்தை விடுவிக்குமாறு வலியுறுத்தி முள்ளிக்குளம் கிராம மக்கள் இன்று ஒன்பதாவது நாளாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையிலே, முள்ளிக்குளம் கிராமத்தை விடுவிப்பது தொடர்பாக இடம்பெற்ற சந்திப்பில் மன்னார் மாவட்ட குருமுதல்வர் அன்ரனி விக்ரர்சோசை, முள்ளிக்குளம் பங்குத்தந்தை அன்ரன் தவராஜ், முள்ளிக்குளம் கிராமத்தைச்சேர்ந்த இருவர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டிருநுதனர்.
இவ்வாறாயினும், இல்லத்திற்கு சொந்தமான 53 ஏக்கர் காணியில் குடியிருந்த முள்ளிக்குளம் கிராம மக்கள் கடந்த 2007 ஆம் ஆண்டு செப்டெம்பர் 5ஆம் திகதி ஸ்ரீலங்கா கடற்படையினரால் கட்டாயமாக வெளியேற்றப்பட்டு இன்றுவரை சொந்த கிராமத்தில் மீள்குடியேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.