மன்னாரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மன்னார் மாவட்ட செயலக கட்டடத் தொகுதியை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (வெள்ளிக்கிழமை) வைபவ ரீதியாக திறந்து வைத்து, உத்தியோகப்பூர்வமாக பணிகளையும் ஆரம்பித்து வைத்தார்.
அதனை தொடர்ந்து மாவட்டச் செயலக மைதானத்தில் இடம்பெற்ற விசேட நிகழ்வில் கலந்துக் கொண்ட பிரதமர் அரச காணிகளுக்கு விண்ணப்பித்திருந்த மக்களுக்கான காணி உறுதிப்பத்திரங்களையும் வழங்கிவைத்தார்.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், அமைச்சர்களான வஜீர அபேவர்த்தன, றிஸாட் பதியுதீன், டி.எம்.சுவாமிநாதன், சாகல ரத்னாயக்க, நாடாளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவர் செல்வம் அடைக்கலநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன், கே.கே.மஸ்தான், மாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துக் கொண்டிருந்தனர்.
இதேவேளை, பிரதமரின் வருகை குறித்து அறிந்த காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்கள் கறுப்பு கொடிகளை ஏந்தியவாறு மாவட்ட செயலகத்திற்கு முன்னால் கூடிய நிலையில், பிரதமர் பின்நுழைவாயில் வழியாக வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.