கால அவகாசம் வழங்குமா ஐ.நா.? – அமைச்சர் மங்கள இன்று உரை
கடந்த 2015ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை உள்ளிட்ட சில நாடுகளின் இணை அனுசரணையில் நிறைவேற்றிக்கொள்ளப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணையில் குறிப்பிடப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு மேலும் இரண்டு வருட கால அவகாசத்தை ஐ.நா.விடம் இலங்கை இன்று கோரவுள்ளது.
நேற்றைய தினம் ஆரம்பமான ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இன்று (செவ்வாய்க்கிழமை) இலங்கை நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு உரையாற்றவுள்ளார். இதன்போது, ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை தெளிவுபடுத்தவுள்ளதோடு, அதனை முழுமையாக செயற்படுத்த கால அவகாசத்தையும் கோரவுள்ளார்.
எனினும் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கக் கூடாதென பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதேவேளை எதிர்வரும் மார்ச் மாதம் 22ஆம் திகதி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் செயிட் அல் ஹூசைனின், இலங்கை தொடர்பான விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதோடு அன்றைய தினம் இலங்கை தொடர்பில் அமெரிக்காவால் மற்றுமொரு தீர்மானமும் முன்வைக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.




