புதிய வரி முறையின் மூலம் நாட்டின் வியாபார சூழலை ஊக்குவிக்க எதிர்பார்த்துள்ளதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ள புதிய உள்நாட்டு வருவாய் சட்டம் குறித்து நேற்றுமுன்தினம் (திங்கட்கிழமை) நடைபெற்ற பொது விழிப்புணர்வு கருத்தரங்கில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அங்கீகாரம் பெற்ற புதிய உள்நாட்டு வருவாய் சட்டமானது, முறையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டியது அவசியம் என்றும் நிதியமைச்சர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
புதிய வருவாய் சட்டம் குறித்து பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் நாடளாவிய ரீதியில் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. அதன் ஒரு அங்கமாக நிதியமைச்சரின் ஆதரவில் இந்த கருத்தரங்கு இடம்பெற்றிருந்தது.
மறைமுக வரிகளை குறைப்பதன் மூலம் மக்கள் மீதான சுமையை குறைப்பதற்கு இந்த புதிய சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.