உள்ளக விசாரணையே அரசின் திட்டம்! – உலக நாடுகளும் பச்சைக்கொடி என்கிறார் மங்கள
“அனைத்துலக விசாரணைப்பிடிக்குள் இருந்து இலங்கையை மீட்டெடுத்தது சர்வதேசமட்டத்தில் தேசிய அரசு அடைந்த மிகப்பெரிய வெற்றியாகும்” என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
“போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்குவதற்கு அரசமைப்பில் இடமில்லை” என்றும் அவர் குறிப்பிட்டார்.
“உரிய வழியில் உள்ளக விசாரணையை முன்னெடுப்பதற்கு உலக நாடுகள் இலங்கைக்கு ஆதரவை வழங்கியுள்ளன. எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் உரிமை இலங்கைக்கே இருக்கின்றது என ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் கூறியுள்ளார்” என்றும் அவர் கூறினார்.
வெளிவிவகார அமைச்சில் நேற்று வியாழக்கிழமை மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கூறியவை வருமாறு:-
மஹிந்த குடும்பத்தின் 2000 மில்லின் ரூபா சொத்து
கண்டறியப்பட்டுள்ளது; வேட்டை தொடரும்
தமது உயிரைத் தியாகம்செய்து, இரத்தம் சிந்தி படையினரே போரை முடிவுக்குக் கொண்டு வந்தனர். ஆனால், தமது அரசின் ஊழல்,மோசடிகளை மூடிமறைப்பதற்காக போர் வெற்றியை மஹிந்த அரசு ஒரு கேடயமாகப் பயன்படுத்தியது. அதுமட்டுமல்ல, மோசடிகளை மறைப்பதற்காகவே தேசப்பற்றும், தேசியக்கொடியும் பயன்படுத்தப்பட்டது.
முன்னாள் ஆட்சியின்போது ஒரு குடும்பத்தின் நலனுக்காக – அதிரகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்காக ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டனர், அரச வளங்கள் துஷ்பிரயோகம்செய்யப்பட்டன. உள்நாட்டிலும், வெளிநாட்டிலுள் சொத்துக்கள் குவிக்கப்பட்டன. அவை குறித்த தகவல்கள் தற்போது அம்பலமாகி வருகின்றன.
2012 நவம்பர் மாதம் 12 ஆம் திகதி யோஷித ராஜபக்ஷ ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில், “சிறுவயதில் இருந்தே அரச வீட்டில்தான் வசித்து வருகின்றோம். எங்களுக்கு எல்லா வசதிகளும் இருப்பதாக நினைக்கின்றார்கள். ஆனால், எமக்கு ஒன்றுமே இல்லை. அரச வாகனங்களையே பயன்படுத்தி வருகின்றோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒன்றுமே இல்லையென அவர் கூறினாலும் நீதிமன்றத்துக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கைகளின் பிரகாரம், இவர்களுக்கு உள்நாட்டிலுள்ள வீடு, காணிகளின் பெறுமதி 2 ஆயிரம் மில்லியன் ரூபாவாகும். உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் இன்னும் பல விடயங்கள் இருக்கின்றன. அவையும் வெளியில் வரும்.
தயான் ஜயதிலக
ஒரு சிங்களப் புலி
தேசப்பற்றாளர்களாக தம்மை அடையாளப்படுத்திக்கொண்டுள்ள சிலர் பற்றிய விவரத்தை வெளியிடவேண்டும். அதில் ஒருவர்தான் தயான் ஜயதிலக. யார் இந்தத் தேசப்பற்றாளர்? ஒரு சிங்களப் புலியாகவே தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்துள்ளார்.
ஜே.வி.பியின் இளைஞர்களைக் கொலைசெய்யும் குழுவிலும் சிறிதுகாலம் இவர் இருந்துள்ளார். அதன்பின்னர் அரச விரோதச்செயல்களில் ஈடுபட்டார். கைதுசெய்யும்நிலை வந்தபோது தலைமறைவானார். 3 வருடங்கள் ஒளிந்திருந்துவிட்டு பிரேமதாஸவுடன் இணைந்துகொண்டார். ஈ.பி.டி.பியிடம் ஆயுதப்பயிற்சியும் பெற்றுள்ளார்.
பின்னர் இருப்பதற்கு இடமின்றி மஹிந்த அரசிடம் சரணடைந்து இராஜதந்திரப் பதவி பெற்றுக்கொண்டார். அவரது காலத்திலலேயே சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு அபகீர்த்தி ஏற்பட்டது. இவர்தான் இன்று தேசப்பற்றைப் பற்றிப் பேசுகின்றார்.
படையினரைக் காட்டிக் கொடுக்கும்
‘நந்திக் கடலுக்கான வழி’
மஹிந்தவின் அரசியல் நாடகத்தின் அடுத்த நடிகர்தான் கமல் குணரட்ன. இவர் ‘நந்திக்கடலுக்கான வழி’ எனும் புத்தகத்தை எழுதியுள்ளார். இந்தப் புத்தகத்தை எவரும் விரும்பிப் படித்திருக்கமாட்டார்கள். நானும் அக்கறைகாட்டவில்லை. இருந்தாலும் ஓரிரு பக்கங்களை வாசித்துள்ளேன். படையினருக்கு எதிராகப் புலிகளால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையிலேயே அந்தப் புத்தகம் இருக்கின்றது.
சுருக்கமாகச் சொல்லப்போனால், படையினரைக் காட்டிக் கொடுக்கும் ஓர் ஆவணமாகவே அது இருக்கின்றது.
வீடு உடைப்பு, கால் உடைப்பு, மரணம் ஆகிய விடயங்களைப் பற்றியே புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
இவ்வாறு எதுவும் நடக்கவில்லை என்று நாம் உலகலாவிய ரீதியில் பரப்புரை முன்னெடுத்து வருகின்றோம். அப்படி நடந்திருந்தால் விசாரணை நடத்தப்படும் எனவும் கூறி வருகின்றோம். இந்நிலையில், படையிலிருந்து ஓய்வுபெற்ற ஒருவர் படையினரை ஒழுக்கமற்ற கட்டமைப்பாகக் காட்டுவதற்கு முயற்சிக்கின்றார்.
படையினர் எந்தத் தவறையும் இழைக்கவில்லை என்று முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார். தவறிழைக்கப்பட்டால் அதற்குரிய பொறுப்பைத் தான் ஏற்பார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், கமல் குணரட்ன அப்படி சொல்லவில்லை. தேசப்பற்றாளர்கள் எனக் கூறிக்கொள்பவர்கள் இந்தப் புத்தகத்தை வாசித்தால் கட்டாயம் தீவைத்துக் கொளுத்துவார்கள். அத்துடன், ‘நந்திக்கடலுக்கான வழி’ எனும் புத்தகத்தை வெளிநாட்டிலுள்ள ஈழ ஆதரவாளர்கள் பெருமளவில் கொள்வனவுசெய்து அவற்றை பகிர்ந்து வருகின்றனர்.
இலங்கை இராணுவம் ஒழுக்கமுள்ள படைக்கட்டமைப்பாகும். ஓரிருவர் தவறிழைத்திருந்தால் அது பற்றி விசாரணை நடத்தப்படவேண்டும். அப்போதுதான் ஏனைய படையினரின் நன்மதிப்பும், கௌரவமும் பாதுகாக்கப்படும். இன்று சர்வதேச மட்டத்தில் இலங்கைப் படைகளுக்கு வரவேற்புக் கிடைத்துள்ளது. ஐ.நா. அமைதிப்படையிலும் சிப்பாய்கள் உள்ளனர். எதிர்வரும் ஜீன் மாதம் 200 பேர் அமைதி காக்கும் பணிகளுக்காக மாலி செல்கின்றனர் .
ஆட்சி மாற்றம் இல்லையேல்
பொருளாதாரத் தடை வந்திருக்கும்
இலங்கையில் இடம்பெற்றவை எனக் கூறப்படும் போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையை நடத்துவதற்கு ஐ.நா. தீர்மானித்திருந்தது. அப்போதைய அரசு இதை எதிர்த்திருந்தாலும் அதை முன்னெடுத்தே ஆகவேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே ஐ.நா. சபை இருந்தது. இதன்படி 2014 ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இலங்கைக்கு சார்பாக 12 நாடுகளே பேசியிருந்தன.
இந்நிலையில், 2015 ஜனவரி மாதம் 8 ஆம் திகதி ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்காவிட்டால் இலங்கை மீது சர்வதேச தடைகள் விதிக்கப்பட்டிருக்கும். பொருளாதாரத் தடை அமுலுக்கு வந்து நாடு பேரழிவை சந்தித்திருக்கும். இந்த அபாயத்திலிருந்து நாட்டைப் பாதுகாத்துள்ளோம்; சர்வதேசத்தின் ஆதரவையும் பெற்றுள்ளோம்.
எமது செயற்பாட்டால்தான் இன்று மஹிந்தவுக்குக்கூட சுதந்திரமாக வெளிநாடுகளுக்குச் செல்லமுடிகின்றது. இல்லையேல் பயணத்தடை விதிக்கப்பட்டிருக்கும்.
இலங்கை
இணை அணுசரனை
வழங்கவில்லை
2015 ஜனவரி 8ஆம் திகதிக்குப் பின்னர் நிலைமை மாறியது. தேசியப் பொறிமுறைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. பொதுத்தேர்தல் விஞ்ஞாபனத்திலும் உள்ளகப் பொறிமுறை நிறுவப்படும் என்று உறுதிமொழி வழங்கப்பட்டது.
உள்ளகத்திட்டத்துடன் ஜெனிவா சென்று உலகநாடுகளுடன் பேச்சு நடத்தப்பட்டது. அப்போது எமது யோசனைக்கு இணை அனுசரணை வழங்குவதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முன்வந்தன. இங்கு பிரசாரம் முன்னெடுக்கப்படுவதுபோல் இலங்கை இணை அனுசரணை வழங்கவில்லை. எமது யோசனைக்கே ஆதரவு வழங்கப்பட்டது.
இவ்வாறு ஆதரவு வழங்கிய நாடுகள் சில பரிந்துரைகளையும் முன்வைத்தன. அவை பரிந்துரைகள் மாத்திரமே. இதில்தான் சர்வதேச நீதிபதி விடயமும் இருந்தது. சர்வதேச நீதிபதிகள் என்ற விடயம் வருவதற்கு மஹிந்த அரசே முழுப்பொறுப்பும் ஏற்கவேண்டும். அவரது ஆட்சிக்காலத்தில் நீதித்துறை சீரழிக்கப்பட்டதாலேயே இப்படியொரு கோரிக்கை வந்தது.
ஆனால், நீதித்துறையின் சுயாதீனம் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. சகல தரப்பும் ஏற்கும் வகையில் உரிய தீர்மானம் எடுக்கப்படும். இந்த முடிவுக்கு எந்தவொரு தரப்பும் அழுத்தம் பிரயோகிக்கவில்லை. இலங்கையின் எதிர்காலத்தை இறைமைமிக்க நாடு என்ற அடிப்படையில் இலங்கைதான் தீர்மானிக்க வேண்டும் என கொழும்பு விஜயத்தின்போது ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரே கூறிவிட்டார்.
இன்று சர்வதேச விசாரணை என்ற விடயம் இல்லாமல்போயுள்ளது. இதுதான் இலங்கை அடைந்தவெற்றி.
போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்குவதற்கு அரசமைப்பில் இடமில்லை என்பதையும் இங்கு கூறிவைக்க விரும்புகின்றேன். உள்ளக விசாரணையே நடத்தப்படும். அதை எமக்கே உரிய வழியில் முன்னெடுப்பதற்கு 2 வருடங்கள் கால அவகாசம் கோரப்பட்டது. அது கிடைத்துள்ளது. இந்நிலையில், மக்களைத் தவறாக வழிநடத்துவதற்குக் குழுவொன்று முயற்சிக்கின்றது.
அதேவேளை, இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இரத்தத்திலும் இனத்தைத் தேடும் (சிங்கலே) காலம் உருவாக்கப்பட்டது. இந்நிலை மாறவேண்டும். 70 ஆவது சுதந்திரத்தை அனைவரும் இலங்கையர்களாகக் கொண்டாட வேண்டும். எதிர்காலத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு நல்லதொரு இலங்கையை கையளிக்கவேண்டும். எனவே, அடிப்படைவாத அரசியலைத் தோற்கடித்து புதியதொரு நாட்டைக் கட்டியெழுப்புவோம்.
சூக்காவுக்கு இலங்கை
வருமாறு அழைப்பு
வவுனியா ஜோசப் முகாமில் சித்திரவதைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டன; தற்போதும் முன்னெடுக்கப்படுகின்றன என்று சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் தலைமைப் பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா ஒருசில தடவைகள் குற்றஞ்சாட்டியிருக்கின்றார்.
சித்திரவதைகள் தொடர்பான ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் உள்ளிட்ட குழுவினர் இலங்கை வந்தபோது சகல பகுதிகளுக்கும் செல்வதற்கு அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
ஜோசப் முகாம் இருக்கின்றது எனக் கூறப்படும் இடத்துக்கும் அவர்கள் சென்றனர். பின்னர் அவ்வாறு எதுவும் இல்லை என அறிவித்தனர்.
ஜஸ்மின் சூக்காவுக்கு இலங்கை வந்த ஆராயுமாறு பல தடவைகள் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீண்டும் அழைப்பு விடுக்கின்றேன்.
இலங்கையில் சித்திரவதை இடம்பெற்ற யுகமொன்று இருந்தது என்பதை எம்மால் நிராகரிக்க முடியாது. எனினும், புதிய அரசின் கீழ் அவ்வாறான சித்திரவதை முகாம்களை செயற்படுத்துவதற்கு எந்தவொரு வகையிலும் அனுமதி இல்லை” – என்றார்.

