முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான, முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷ, யுனெஸ்கோவின் ஏற்பாட்டில் பரிஸில் நடைபெற்ற வெசாக் பண்டிகையை பார்வையிடுவதற்கு 25 மில்லியன் ரூபா செலவிட்டதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2014ஆம் ஆண்டு பரிஸ் சென்றபோது ஷிரந்தி ராஜபக்ஷ தங்கியிருந்த ஹோட்டலின் அறை ஒன்றுக்கான ஒரு நாள் வாடகை, 63 ஆயிரத்து 945 யூரோ எனவும் அவரின் உறவினர்களுக்கான அறை வாடகை 6 ஆயிரத்து 924 யூரோ என்றும் அமைச்சர் மங்கள குறிப்பிட்டார்.
ஒரு நாளைக்கு மட்டும் இவர்கள் ஆயிரத்து 350 யூரோ செலவு செய்துள்ளதாகவும், தொலைபேசி அழைப்புக் கட்டணம் ஆயிரத்து 200 யூரோ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இவை அனைத்தையும் அன்றைய ஆட்சியில் இருந்த அரசாங்கம் தான் வழங்கியிருக்கிறது என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.