ஸ்ரீலங்காவில் மனித உரிமை காப்பு: அல் ஹுசைனுக்கு மங்கள விளக்கம்
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசைனை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
ஜெனீவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது கூட்டத் தொடர் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.
இதில் கலந்துகொண்டுள்ள ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமவீர, நேற்றைய தினம் மனித உரிமைகள் ஆணையாளரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
ஸ்ரீலங்காவில் மனித உரிமை காப்பு விடயத்தில் இதற்குப் பின்னர் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், நல்லிணக்க முயற்சிகள் உட்பட இதர விடயங்களும் இந்த சந்திப்பின்போது விளக்கப்படுத்தப்பட்டதாக தெரியவருகிறது.
இதேவேளை பிரித்தானிய நாடாளுமன்றத்தின் வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய நாடுகளின் தொடர்பாடல் சம்பந்தமான இராஜாங்க செயலாளரும், ஆசிய வலய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சருமான ஆலோக் ஷர்மாவையும் அமைச்சர் மங்கள சமரவீர நேற்று சந்தித்துள்ளார்.
ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நல்லிணக்கப் பணிகள், எதிர்காலத் திட்டங்கள் தொடர்பான இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




